காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம்! காவிரி ஒழுங்காற்று கூட்டம் தொடங்கியது.. தமிழக அதிகாரிகள் பங்கேற்பு
டெல்லி: தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர் முழுமையாக கிடைக்காத நிலையில் டெல்டா விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது ஆகஸ்ட் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் இந்த மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

எனவே இந்த தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை என்பதையும் மேற்கோள் காட்டியிருந்தது. அதேபோல தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசும் பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி என 4 மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த நீர் வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.

காவிரி ஒழுங்காற்று கூட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரைகளை அளிக்கும். அதாவது கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் எவ்வளவு மழை பெய்திருக்கிறது. பெய்துள்ள மழை நீர் வரத்தை அதிகரிக்குமா? அடுத்த சில மாதங்களில் எவ்வளவு மழை பொழிவு இருக்கும்? உண்மையிலேயே கர்நாடகத்தில் பருவ மழை போதிய அளவு பெய்யவில்லையா? அணையில் நீர் வரத்து எவ்வளவு இருக்கிறது? தமிழகத்திற்கு தேவையான நீரின் அளவு என்ன? என்பதை புள்ளிவிவரத்தோடு காவிரி மேலாண்மை வாரியத்திடம் கொடுத்து சில பரிந்துரைகளை முன்வைப்பார்கள்.
அந்த வகையில் இந்த காவிரி ஒழுங்காற்று கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை இதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காவிரி ஒழுங்காற்று கூட்டமும், நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications