காவிரி விவகாரம்.. “அவசரம்”.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு முறையீடு!
டெல்லி: காவிரி நதி நீர் தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையிட்டுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால், காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்தது. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்துள்ளார்.
பட்டியலில் இணைக்கப்படாமல் அவசர வழக்காக எப்படி ஏற்பது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, முறையீட்டு பட்டியலில் இணைக்க, நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைக்க அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications