சித்தராமையா 'சேட்டை'... காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு பொய் சொல்லுதாம்.. திசை திருப்புதாம்!
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தவறான தகவல்களை தெரிவித்து திசை திருப்புவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 92 நாட்களில் 99.776 டிஎம்சி நீரை பயன்படுத்தி இருக்கிறது. ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை தமிழ்நாடு 99.776 டிஎம்சி நீரை பயன்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு மொத்தம் 5.60 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி எனக் குறிப்பிட்டுள்ளது. இது தவறான தகவல். இத்தகவலில் உண்மை எதுவும் இல்லை. வடகிழக்கு பருவமழையால் கர்நாடகா எந்த வித பலனையும் பெறவே இல்லை. கர்நாடகாவுக்கு சாதாரண மழைப்பொழிவு மூலமே நீர் கிடைத்துள்ளது.
காவிரி ஒழுங்காற்று ஆணையமானது தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியம் அற்றது. தமிழ்நாட்டுக்கு தேவையான நீரை தற்போதைய நிலையில் திறந்துவிட முடியாது. இவ்வாறு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு சித்தராமையா கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சித்தராமையா கூட்டினார். காவிரி பிரச்சனைக்காக கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் பாஜகவின் பசவராஜ் பொம்மை, ஜேடிஎஸ்-ன் குமாரசாமி பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்துக்குப் பின் தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட முடியாது என முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக கூறினார்.
கர்நாடகா அனைத்து கட்சிக் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், அமைச்சர்கள் கிருஷ்ண பைரே கவுடா, ராமலிங்கரெட்டி, போசராஜூ, மது பங்காரப்பா, முனியப்பா, ஜமீர் அகமது கான், முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி, பாஜக எம்.பிக்கள் மோகன், பிரதாப் சிம்ஹா, சுயேட்ச எம்பி (மாண்டியா) நடிகை சுமலதா அம்பரீஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டண்ணய்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று டெல்லி செல்கிறார் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார். டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து காவிரி பிரச்சனையில் கர்நாடகா தரப்பு நியாயத்தை விளக்க இருக்கிறார். அத்துடன் முதல்வர் சித்தராமையா எழுதிய, தமிழ்நாட்டுக்கு எதிரான கடிதத்தையும் அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வழங்குகிறார் டிகே சிவகுமார்.












Click it and Unblock the Notifications