டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூலை 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் டெல்லியில் ஜூன் 17-ல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. காவிரி ஆணையம் என்பது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த மட்டுமே அமைக்கப்பட்டது என்பது தமிழகத்தின் நிலைப்பாடு.

இதனையடுத்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அத்துடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் குழு டெல்லி செல்லும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர்களை தமிழக குழு நாளை சந்திக்க இருக்கிறது. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூலை 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications