பொங்கும் காவிரி? தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு! காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடி
டெல்லி: தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகா சரியாக தண்ணீர் திறந்து விடாமல் உள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்காததால் அதிகாரிகள் வெளிநடப்பு செய்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் தருவது இல்லை. இதுதொடர்பாக நீண்டகாலம் சட்ட போராட்டங்கள் நடந்தன.

தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
இதுவரை மொத்தம் 21 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று டெல்லியில் 22வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் அதனை கர்நாடகா அரசு ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் தான் சுமார் மூன்றரை மணிநேரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் என்பது முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் தமிழ்நாட்டுக்கு உரிய முறையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 9 ம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா சார்பில் 37.9 டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும் எனவும், அதனை திறந்து விடவும் தமிழக அரசு கூறியிருந்தது. இந்நிலையில் தான் தமிழக அரசு கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் கர்நாடகா திறந்து விடுகிறதா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் கர்நாடகா தொடர்ந்து தங்களுக்கு தண்ணீர் இல்லை என கூறி வருகிறது. ஆனால் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இத்தகயை சூழலில் கர்நாடகா அரசு எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications