நீட் வினாத்தாள் கசிவு.. ’மாஸ்டர் மைண்ட்” ஆக செயல்பட்ட புனே பெண் பேராசிரியை.. சுற்றி வளைத்த சிபிஐ
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள புனேவை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் மணிஷா மந்தாரேவை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய தேர்வு முகமைக்காக பல ஆண்டுகளாக கேள்வித்தாள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர், மாணவர்களுக்கு ரகசியமாக வினாத்தாளை கசியவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளில் சேர முடியும் என்பதால் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கானவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது கண்டறியப்பட்டதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறு தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மோசடியில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நேற்று புனேவை சேர்ந்த வேதியியல் பேராசிரியரை கைது செய்தது. இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட பேராசிரியரை சிபிஐ கைது செய்துள்ளது.
புனேவை சேர்ந்த தாவரவியல் பேராசிரியரான மணிஷா மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் அவரை கைது செய்துள்ளது. பயாலஜி வினாத்தாளை கசிய விட்டதில் இவர் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு மோசடியில் முக்கிய நபராக செயல்பட்ட பிவி குல்கர்னியிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளார். புனேவில் உள்ள மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வந்த மந்தாரே, தேசிய தேர்வு முகமைக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக கேள்வித்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
உயிரியியல் மற்றும் தாவரவியல் வினாத்தாளை முழுமையாக அணுகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இவர் புனேவில் நடைபெற்ற ரகசிய பயிற்சி வகுப்பில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு இந்த வினாத்தாளை கசியவிட்டதாக கூறப்படுகிறது.
லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்டு, கசிந்த கேள்விகளையும் அதற்கான விடைகளையும் மந்தாரேவே அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கான தேர்வர்களை மனிஷா வாக்மரே என்பவர் உதவியுடன் மந்தாரே திரட்டியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. மனிஷா வாக்மரே மே 14-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications