ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி.. அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு
டெல்லி: ரூ. 17,000 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, அனில் அம்பானி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு மேற்கொண்டிருக்கிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் விளம்பர இயக்குநர் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ.2,000 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வங்கி நிதிகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்டன மற்றும் கடன்கள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதை நிரூபிக்க, முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிப்பதே இந்தச் சோதனைகளின் முக்கிய நோக்கம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எஸ்பிஐ வங்கிக்கு ரூ.2,000 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜூன் 13 அன்று எஸ்பிஐ வங்கியானது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானியை "மோசடி" என்று வகைப்படுத்தியதுடன், ஜூன் 24 அன்று ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தை "மோசடி" என்று வகைப்படுத்தினால், 21 நாட்களுக்குள் வங்கிகள் அதை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். மட்டுமல்லாது சிபிஐ அல்லது காவல்துறைக்கும் வழக்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
முன்னதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு எஸ்பிஐ வங்கி கடிதம் அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில், பல குழு நிறுவனங்களுக்கு இடையே நிதி நகர்வுகளைக் கொண்ட சிக்கலான வலைப்பின்னலில், கடன்கள் பயன்படுத்தப்பட்ட விதத்தில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
"எங்களது விளக்க அறிக்கைக்கான பதில்களை நாங்கள் ஆராய்ந்தோம். RCL-இன் கணக்கின் செயல்பாட்டில் காணப்பட்ட முறைகேடுகள் அல்லது கடன் ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிவரப் பின்பற்றாதது குறித்து, திருப்திகரமான காரணங்கள் வழங்கப்படவில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என எஸ்பிஐ அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிபிஐ ரெய்டு மேற்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications