பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பு.. மாஜி நிதி செயலாளர் வீட்டில் சிபிஐ ரெய்டு..காங்கிரஸ் ஷாக்-ஏன்?
டெல்லி: மத்திய நிதித்துறையின் செயலாளராக இருந்த அரவிந்த் மாயராம் தற்போது ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆலோசகராக உள்ளார். சமீபத்தில் இவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற நிலையில் தற்போது அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். ஐஏஎஸ் அதிகாரியான இவர் ராஜஸ்தான் கேடரை சேர்ந்தவர். இவர் 1978 ம் பேட்ஸ்சில் ஐஏஎஸ் ஆக பணிக்கு சேர்ந்தார். ராஜஸ்தானில் பணியாற்றி இவர் மத்திய அரசிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது இவர் நிதித்துறையின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். பணி ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
3 மேஜர் பாயிண்ட்..நடிகர் சுதீப்பை காங்கிரஸ் குறி வைப்பது ஏன்? கர்நாடகா தேர்தலில் ‛கை’ பிளான் இதுதான்
சிபிஐ அதிரடி சோதனை
மேலும் தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் பொருளாதார ஆலோகராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று திடீரென டெல்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
காரணம் என்ன?
இவர் மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றியபோது இந்திய ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் நூலிழை (Thread) வினியோகிக்கும் ஒப்பந்தத்தை இங்கிலாந்தின் டி லா ரூ இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விதிமீறி நீட்டிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அவர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
பாரத் ஜோடோ யாத்திரை பங்கேற்ற பின்..
முன்னதாக அரவிந்த் மாயராம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதால் தான் பழைய வழக்குகளை தூசித்தட்டி அரவிந்த் மாயராம் வீடு, அலுவலகங்களில் மத்திய அரசு சார்பில் சிபிஐ மூலம் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
ஜெய்ராம் ரமேஷ் ‛அட்டாக்’க்ஷ
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‛‛ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றபோது அவரை பாஜக தாக்கி பேசியது. ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் கைகோர்த்தபோது அவர் பற்றி அவதூறு பரப்பியது. இப்போது முன்னாள் மத்திய நிதித் துறை செயலாளர் மீது சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. பிரதமர் மோடியின் சிபிஐயால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடியின் FDI கொள்கை என்ப பயம் (Fear), அவதூறு(Defamation) மற்றும் அச்சுறுத்தல் (Intimidation) என உள்ளது. இது கோழையின் மனநிலையாகும். இருப்பினும் பாரத் ஜோடோ யாத்திரை என்பது தொடரும்'' என மத்திய பாஜக அரசை அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.