வரும் கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? தேதியை அறிவித்தது சிபிஎஸ்இ
டெல்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தெர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பாடத்திட்டத்தை கொண்ட சிபிஎஸ்இயின் கீழ் நாடு முழுக்க பள்ளிகள் உள்ளன. பல தனியார் பள்ளிகளும் இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 வகுப்புகள் படித்த மாணவர்களுக்கான தேர்வு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வரும் 2024 - 25 ஆம் கல்வியாண்டில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வா கூறியதாவது:
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடைபெறும். கடந்த கல்வி ஆண்டிலும் சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுகள் முறையே 28 மற்றும் 47 நாட்களில் நடந்து முடிந்தது" என்றார்.
முன்னதாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த கல்வி ஆண்டில் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 2-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.
பொதுவாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மண்டலம் வாரியாகவும் வெளியிடப்படும். இந்தாண்டு திருவனந்தபுரம் தான் அதிகபட்சமாக 99.91% பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து விஜயவாடா 99.04% பெற்றுள்ள நிலையில், சென்னை 98.47% மற்றும் பெங்களூரு - 96.95% பெற்றுள்ளது. தொடர்ந்து மேற்கு டெல்லி - 95.64% மற்றும் கிழக்கு டெல்லி - 94.51% மார்க் பெற்றுள்ளது.
மேலும், சண்டிகர் - 91.06%, பஞ்ச்குலா - 90.26%, புனே - 89.78%, அஜ்மீர் - 89.53% பிராந்தியங்களில் தேர்ச்சி சதவிகிதம் உள்ளது. குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ்ஜில் தேர்ச்சி விகிதம் 78.35% ஆக உள்ளது. மேலும், பள்ளி வாரியாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சிடிஎஸ்ஏ எனப்படும் மத்திய திபெத்திய பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. அங்குப் படித்த மாணவர்களில் 99.23% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நவோதயா வித்தியாலயா பள்ளிகளில் தேர்ச்சி விதிதம் 98.90 சதவீதமாகவும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 98.81 சதவீதமாகவும் இருக்கிறது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும் அரசுப் பள்ளிகளில் 88.23 சதவீதமாகவும் தனியார்ப் பள்ளிகளில் அது 87.70 சதவீதமாகவும் உள்ளது
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 93.60 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இது 0.48 சதவிகிதம் ஆகும். மண்டல வாரியாக பார்த்தால் திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75 சதவிகிதம் பேரும் விஜயவாடாவில் 99.60 சதவிகிதம் பேரும் சென்னை மண்டலத்தில் 99.30 சதவிகிதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications