சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
டெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாலை 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார்.
அதன்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரம்
10ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் காலை 10.30 முதல் 1.30 மற்றும் மதியம் 2.30 முதல் 5.30 மணி என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறவுள்ளது. காலை தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆசிரியர்கள் மதியம் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு முடிவுகள்
செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் நடைபெறும். தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாஸ்க் அணிவது, சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவது போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை www.cbse.gov.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரமேஷ் பொக்ரியால் கருத்து
மேலும், மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் பொதுத்தேர்வுகளை அச்சமின்றியும் பதற்றமின்றியும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதவிர தேர்வு நடைபெறத் தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு
கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கிருக்கும் நிலையைப் பொருத்து பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications