"ரோல் நம்பர் என்னுடையது.. ஆனா பேப்பர் வேறொருவருடையது!" CBSE விடைத்தாள் நகலை பார்த்து உறைந்த மாணவன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கஷ்டப்பட்டு படித்தால் இந்த சிஸ்டம் உங்களுக்கு நியாயமான பலனைத் தரும் என்ற நம்பிக்கையோடு இரவு பகலாகப் படித்துப் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையை இந்தாண்டு சிபிஎஸ்இ சிதைத்துள்ளது. ஏற்கனவே நீட் வினாத்தாள் லீக் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பீட்டுக் குளறுபடி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த நீட் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனது மிகப் பெரியளவில் சர்ச்சையாக வெடித்தது. இதன் காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இதில் பல பூகம்பங்கள் வெடித்துள்ள நிலையில், விசாரணையில் மேலும் பலர் கைதாகலாம் என்று சொல்லப்படுகிறது. இது மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

CBSE Class

சிபிஎஸ்இ

இது ஒரு பக்கம் இருக்க.. இப்போது சிபிஎஸ்இ-க்குள் அடுத்த மெகா பூகம்பம் வெடித்துள்ளது. நவீனமயமாக்கல் என்ற பெயரில் சிபிஎஸ்இ இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' (OSM - On-Screen Marking) சிஸ்டம் தான் இப்போது ஒட்டுமொத்தப் பிரச்சினைக்கும் காரணமாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு கோடி விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்ய சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இருப்பினும், அதற்கான அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாத நிலையில், அது பெரிய விவகாரமாக மாறியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற +2 மாணவர், தனக்கு இயற்பியல் பாடத்தில் எதிர்பாராத அளவு மிகக் குறைந்த மதிப்பெண்கள் வந்ததால், மறுமதிப்பீட்டு முறைக்கு விடைத்தாளின் நகலைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த மே 23 அன்று அவருக்கு விடைத்தாள் நகல் கிடைத்தபோது அதிர்ச்சியில் உறைந்துபோனார். ஏனென்றால் சிபிஎஸ்இ போர்ட்டலில் அப்லோடு செய்யப்பட்டிருந்த இயற்பியல் விடைத்தாளில் இருந்த கையெழுத்து வேதாந்துடையதே அல்ல.. வேறொரு மாணவனின் விடைத்தாள், வேதாந்தின் ரோல் நம்பருடன் அது இணைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.

புலம்பல்

இது குறித்து ஏஎன்ஐ ஊடகத்திடம் பேசிய வேதாந்தின் சகோதரர் சித்தாந்த் ஸ்ரீவஸ்தவா, "அவனது விடைத்தாள் முற்றிலும் வேறொருவருடன் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அவன் மனதளவில் அடியோடு உடைந்துபோய்விட்டான்" என வேதனை தெரிவித்தார். தன் எதிர்காலத்திற்காகக் குரல் எழுப்பிய வேதாந்தின் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை. மாறாக அவனை நெட்டிசன்கள் குறிவைத்து விமர்சித்தே வருகிறார்கள்.

அதாவது அவனது சோஷியல் மீடியா புரொஃபைலில் இருந்த ஒரு குறிப்பிட்ட லொகேஷன் டேக் விவகாரத்தை வைத்துக் கொண்டு, அவனை ஆன்டி-நேஷனல் என்றும் பாகிஸ்தானி என்றும் முத்திரையைக் குத்தி வருகிறார்கள். ஒரு மாணவன் சிஸ்டத்தால் வஞ்சிக்கப்பட்டது ஒருபுறம் என்றால், நியாயம் கேட்டதற்காகச் சமூக வலைத்தளங்களால் தேசத்துரோகி எனச் சித்தரிக்கப்பட்டது அவருக்கு மன உளைச்சலை மேலும் அதிகரித்தே இருக்கிறது.

விளக்கம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு சிபிஎஸ்இ இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதில் அவர்கள், "வேதாந்த், உங்களது இயற்பியல் விடைத்தாள் குறித்த புகாரை ஆராய்ந்தோம். பரிசீலனைக்குப் பிறகு, உங்களது உண்மையான விடைத்தாள் நகல் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண்களுடன் உங்களது ரிசல்ட்டை அப்டேட் செய்யத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வேதாந்தை போல மேலும் சிலருக்கும் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வரூன் வர்மா உள்ளிட்ட முன்னணிப் பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வி நிபுணர்கள் இது தொடர்பாகக் கவலை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தப்பட்ட முறை முற்றிலும் முரணாகவும், கணிக்க முடியாததாகவும் இருந்ததாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் புகார் அளிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முரண்பாடுகள்

இந்த முறை விடைத்தாள் திருத்தம் விவகாரத்தில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாக நெட்டிசன்கள் புகாரளித்துள்ளனர். அவர்கள் மேலும், "டிஜிட்டல் போர்டல் முடக்கம், கட்டணம் செலுத்தியும் ரசீது வராதது, தெளிவில்லாத விடைத்தாள் ஸ்கேன்கள் எனத் தொழில்நுட்பக் கோளாறுகளை விட, அதிகாரிகளின் அலட்சியமே மாணவர்களின் மனநலனைப் பாதித்துள்ளது. நம் பேப்பரை ஒழுங்காகத்தான் திருத்தினார்களா என்ற சந்தேகம் மாணவர்களின் மனதில் விதைக்கப்பட்டதே இந்த சிஸ்டத்தின் ஆகப்பெரும் தோல்வி" என நெட்டிசன்கள் சீறுகின்றனர்.

மதிப்பெண் சான்றிதழ்களைப் புதுப்பித்து விடலாம், ஆனால் சிதைந்துபோன மாணவர்களின் மனநலனை எப்படி சரி செய்ய முடியும் என்பதே அரசின் பிரதானக் கேள்வியாக இருக்கிறது. டெல்லி மாணவர் வேதாந்தின் விடைத்தாள் மாறிய விவகாரத்தில் சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டாலும், அவன் எதிர்கொண்ட ஆன்லைன் வன்மத்தின் வடுக்கள் அப்படியேதான் இருக்கும். எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கச் சரியான அமைப்புகள் இல்லை என்றால் அது பெரிய கொடுக்கும் என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+