டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு... ரூ.3,768 கோடி ஒதுக்கீடு... நிதியமைச்சர் அறிவிப்பு
டெல்லி: முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், இதற்காக ரூ.3,768 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லாபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது
இந்நிலையில், அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் இதற்காக 3,768 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதாகவும் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்து மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கிடும் பணிகள் மொபைல் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்... பட்ஜெட்டில் அறிவிப்பு!
வழக்கமாக காகிதங்கள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வதற்குப் பதில் டிஜிட்டல் முறையில் சென்சஸ் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த செயலி 16 மொழிகளில் வெளியிடப்படும் என்றும் இதில் தகவல்களைப் பொதுமக்களே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.