கொரோனாவைவிட கொடூர பாதிப்பை ஏற்படுத்துவது.. அரசின் தவறான நிர்வாகம்.. பிரசாந்த் கிஷோர் அட்டாக்
டெல்லி: இந்தியாவில் கொரோனா முதல் அலையிலும் சரி இரண்டாம் அலையிலும் சரி கொரோனா வைரசை விட அரசின் தவறான நிர்வாகத்தாலேயே பொதுமக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள் எனத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்,
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆக்சிஜன் தட்டுப்பாடும் பரவலாக ஏற்பட்டுள்ளது.

முதல் அலை - விசித்திரமான ஊரடங்கு
நாட்டின் பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கொரோனா விஷயத்தில் தொடர்ந்து பாஜகவை மிகக் கடுமையாகச் சாடி வருகிறார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் மீண்டும் மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டரில் பிரசாந்த் கிஷோர், "இந்தியாவில் கொரோனாவை தவறாகக் கையாள்வது. முதல் அலையில் விசித்திரமான மற்றும் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஊரடங்கு மூலம் கொரோனாவைவிட அதிகமான துன்பங்களையும் சோகங்களையும் மக்களுக்குக் கொடுத்தது.

இரண்டாம் அலை - ஆக்சிஜன் பற்றாக்குறை
கொரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை. இது கொரோனா வைரசைவிட அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இரண்டிலும் பொதுவானது ஒன்று தான் - தொலைநோக்கு பார்வையின்மை நிலைமையை மிக மோசமாகக் கையாள்வது" என மத்திய அரசை நேரடியாகக் குறிப்பிடாமல் பிராந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்,

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் ஆலோசகராக பணியாற்றினார். குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் அவருக்கும் இடையே நேரடியாகவே மோதல் முற்றியது. இதனால் மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களைத் தாண்டினால், தான் தேர்தல் ஆலோசகர் தொழிலில் இருந்தே விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஆக்சிஜனை கொடுங்கள்
அப்போதுவரை அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் நேரடியாகப் பெரிதாக விமர்சித்ததில்லை. ஆனால், அதன் பின்னர், பல்வேறு இடங்களிலும் அவர் மோடியை நேரடியாகவே விமர்சித்துள்ளார், நேற்றுகூட அவர் தனது ட்விட்டரில், " பிரதமரே, நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆக்சிஜன் வேண்டும் எனக் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஆக்சிஜனையாவது கொடுங்கள்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications