லைசன்ஸ்.. வண்டியின் எப்சி காலாவதியாகிவிட்டதா.. அரசு உங்களுக்கு மீண்டும் சலுகை
டெல்லி: உங்களின் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் காலாவதியாகிவிட்டாலும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை, காலாவதியான ஆவணங்கள் செல்லும் என மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களாக மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர். வேலைகளை இழந்தனர். வறுமையில் தவித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கடந்த ஐந்து மாதங்களாக புதுப்பிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
இதையடுத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய தரை வழி சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில் வாகனங்களுக்கான ஃபிட்னஸ், ஓட்டுநர் உரிமம், பெர்மிட், வாகனப்பதிவு மற்றும் வாகனங்கள் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 வரை செல்லும் என்று அறிவித்துள்ளது.
அதாவா பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த உரிமங்கள், ஜூன் வரை முதற்கட்டமாக நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் செப்டம்பர் இறுதி நீட்டிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 31 வரை ஆவணங்கள் செல்லும் என்று நீட்டித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வாகன ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் உருவாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications