வட்டி கிடையாது! மானியம் உண்டு! பெண்களுக்கு ரூ 3 லட்சம் கடன் தரும் மத்திய அரசு..எப்படி விண்ணப்பிப்பது
டெல்லி: சிறு குறு தொழில் தொடங்க மகளிருக்கு வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வங்கி கடன் அளிக்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பெண்கள் பயன்பெற வெண்டும் என்ற இலக்குடன் இந்த திட்டம் விரிவுபடுத்த உள்ளதாம். உத்தியோகினி திட்டம் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மக்களுக்கு பயனளிக்க கூடிய பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் செய்து வருகின்றன. குறிப்பாக தற்போது மகளிருக்கு பலனளிக்கும் வகையில் கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படியான ஒரு திட்டம் தான் உத்தியோகினி.

மத்திய அரசின் திட்டமான இந்த உத்தியோகினி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுய தொழில் தொடங்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் வட்டியில்லாமல் வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. வட்டி மட்டும் இன்றி குறிப்பிட்ட தொகை மானியமாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
உத்தியோகினி திட்டம்: பொருளாதார ரீதியாக சாதாரண பெண்கள் முன்னேற்றம் அடையும் வகையில் மத்திய அரசு அறிவித்த திட்டம் உத்தியோகினி. பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டம் போதிய அளவு மக்கள் மத்தியில் போய் சேரவில்லை. இதனால் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது உத்தியோகினி திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்கவும் தங்கள் தொழிலை விரிவு செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
வட்டி இன்றி 3 லட்சம் கடன்: அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை வங்கி கடன் மூலமாக கிடைக்கும். இதற்கு வட்டி கிடையாது. அதுமட்டும் இன்றி மானியமும் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் ஒன்றரை லட்சம் மானியமாக கிடைக்கும். இதர பிரிவினர் என்றால் 30 சதவிகிதம் மானியம் கிடைக்கும். மீதமுள்ள ஒன்றரை லட்ச ரூபாயை வட்டி இன்றி தவணை முறையில் திருப்பி செலுத்தி கொள்ள முடியும்.
88 வகையான தொழில்கள்: மளிகை கடைகள், தேயிலை தூள் தயாரிப்பு, தையல் கடைகள் உள்ளிட்ட 88 வகையான சிறு குடிசை தொழில்களை செய்ய கடன் பெறலாம். ஏற்கனவே இந்த தொழில்களில் இருந்தால், அதனை விரிவு படுத்தவும் கடனுதவி கிடைக்கும். 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு கோடி பெண்களுக்கு வாய்ப்பு: என்ன தொழில் செய்ய இருக்கிறீர்கள்.. எவ்வளவு செலவு ஆகும், வருமானம் ஆதாயங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, புகைப்படங்கள், ஆண்டு வருமான சான்றிதழ், உள்பட கேட்கப்பட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
இதற்கு முன்பாக கடன் வாங்கி கட்டாமல் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 47 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். தற்போது ஒரு கோடி பெண்கள் பயன்பெற வேண்டும் என்ற டார்கெட் உடன் திட்டத்தை விரிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications