ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்.. பயணத்தை தவிருங்கள்.. மக்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!
டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடு படாதபாடு பட்டது. இதன்பின்னர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது.
தற்போது நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் வந்து விட்டது என்று கூறும் அளவுக்கு பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டிலேயே நமது அண்டை மாநிலமான கேரளாவில்தான் தினமும் 6,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்தியாவில் கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்தியாவில் இனிவரும் மாதங்கள் பண்டிகை காலமாகும். தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகள் வருவதால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மக்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்வதை கூடிய வரையில் தவிர்த்து விட்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யு வேண்டும் என்றும் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு பல்வேறு ஆலோசனையை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
* திருவிழா கொண்டாட்டங்களின் போது கொரோனா வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
* 5 சதவீதத்திற்கும் அதிகமான பாசிட்டிவ் ரேட் கொண்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* மால்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
* சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கோவிட் -பொருத்தமான நடத்தை என்ற கொரோனா நிர்வாகத்தின் 5 துண்களை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* முன்கூட்டிய அனுமதியுடன் அனுமதிக்கப்படும் கூட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
* மாவட்டங்களில் கொரோனாவின் நிலை என்ன? பாதிப்பு நிலவரம் என்ன? என்பதை மாவட்ட அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.