பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வாங்க போறீங்களா..ஆதார் விஷயத்தில் மத்திய அரசு முக்கியமான உத்தரவு
டெல்லி: நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்யும் போது ஆதார் பதிவுகள் மூலம் அங்கீகரிப்பதற்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) அலுவலகத்திற்கு மத்திய அரசு அனுமதி அனுமதித்துள்ளது. எனினும் பிறப்பு இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிறப்புக்கும் ஆதார் வேண்டும். இறப்புக்கும் ஆதார் வேண்டும் என்கிற அளவிற்கு ஆதார் கார்டு கண்டிப்பாக வேண்டும். அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் சிகிச்சை பெற்று குழந்தை பெற்றெடுத்து சலுகைகளை பெறுவதற்கு ஆதார் கார்டுகள் கேட்கப்படுகின்றன. கட்டாயம் இல்லை என்றாலும் ஆதார் இருந்தால் தான் சலுகைகள் கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.
அதேபோல் ஒருவர் இறந்துவிட்டால், அவரது ஆதார் எண் இருந்தால் தான் இறப்பு சான்றிதழை கூட பெற முடியும் என்கிற நிலையும் இருக்கிறது. அதேநேரம் ஆதார் இல்லை என்றாலும் இறப்பு சான்றிதழ் கிடைக்கும் என்றாலும், ஆதார் இருந்தால் அது மிக எளிதாக ஆவணமாக ஏற்கிறார்கள். இதுதான் எதார்த்த நிலையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்யும் போது, வழங்கப்பட்ட அடையாள விவரங்களை அங்கீகரிக்க, ஆதாரில் டேட்டாக்களை இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தாராளமாக பயன்படுத்தலாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEiTY) அனுமதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், " பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969-ன் கீழ் நியமிக்கப்பட்ட பதிவாளர், பிறப்பு அல்லது இறப்புகள் தொடர்பாக மனைவி, கணவன், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அளிக்கும் தகவலின் படி, பிறப்பு அல்லது இறப்புகளை பதிவு செய்யும் போது, அவர்களின் அடையாளத்தை பதிவு செய்ய ஆதார் தகவல்களை பயன்படுத்திலாம்" என்று கூறியுள்ளது.
அதேநேரம் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்துவதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டில், பொதுமக்களின் பணம் திருடுபோவதை தடுக்க, ஆதார் மூலம் ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் திட்டத்திற்கு அனுமதி அளித்து மத்திய அரசு விதிகளை தளர்த்தியது. இதன்படி ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்த விரும்பும் மத்திய அரசின் பிற அமைச்சகங்கள் அல்லது மாநில அரசுகள், இதுபோன்ற ஆதார் அங்கீகாரம் ஏன் தங்களுக்கு வேண்டும் என்பதற்கான நியாயமான காரணத்தை கூறி மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.












Click it and Unblock the Notifications