அதிகரிக்கும் கொரோனா.. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல்
டெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு சார்பில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுவதோடு 5 நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 3ம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையவில்லை. தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரத்தில் ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
மத்திய அமைச்சர் ஆலோசனை
இதை உறுதி செய்யும் வகையில் சீனா, தென்கொரியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் படிப்படியாக கொரோனா அதிகரித்து வந்துள்ளது பாதிப்பின் அடிப்படையில் தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநிலங்களுக்கு கடிதம்
இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது:
பரிசோதனை மேற்கொள்ளுங்க
தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் சளி, காய்ச்சல், சுவாச பிரச்சனைகளுடன் வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை குறைக்க கூடாது. புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனரா என்பதையும் ஆராய வேண்டும்.
5 நடைமுறைகள் அவசியம்
பரிசோதனை செய்தல், பாதிப்பை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா தடுப்புக்கான வழிமுறைகளை கடைப்பிடித்தல் உள்ளிட்ட 5 நடைமுறைகளை முறையாக முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அறிவுரை
மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் பொதுமக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிதல், கைகளை சோப்பு போட்டு கழுவுதல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல், சமூக இடைவெளியுடன் இருத்தல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசும் அறிவுறுத்தியுள்ளது.