மேற்கு வங்கம் : விஸ்வரூபமெடுத்த போலி தடுப்பூசி முகாம்கள்.. விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம்!
டெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த போலி தடுப்பூசி முகாம்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் ஹரி கிருஷ்ணா திவேதிக்கு, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவை விரட்டுவதற்கான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான்.
ஆரம்ப காலத்தில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.

போலி தடுப்பூசி முகாம்
நிலைமை இவ்வாறு இருக்க மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தலைநகர் கொல்கத்தாவில் சில பகுதிகளில் போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அதுவும் திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தியே இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

விளக்கம் வேண்டும்
தடுப்பூசி போட்டதற்கான மெஸேஜ் ஏதும் வராததால் இது போலி முகாம் என்பது அவருக்கும் மற்றவர்களுக்கும் தெரியவந்தது. இந்த நிலையில் போலி தடுப்பூசி முகாம்கள் நடந்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர் ஹரி கிருஷ்ணா திவேதிக்கு, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் அனுப்பி உள்ளார்.

தடுப்பூசி சான்றிதழ்கள் இல்லை
கொல்கத்தா மாநகரின் சில பகுதிகளில் இந்த தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் எவரும் கோ-வின் மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களைப் பெறவில்லை, இந்த தடுப்பூசி முகாம்களின் உண்மையான தன்மை குறித்த அச்சங்களுக்கு வழிவகுக்கிறது என்று ராஜேஷ் பூஷண் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கோ-வின் ஆப்-பில் பதிவு
கொரோனாவுக்கான அனைத்து தடுப்பூசி அமர்வுகளும் கோ-வின் போர்ட்டல் மூலம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும் அனைத்து தடுப்பூசிகளும் கோ-வின் ஆப்-பில் பதிவு செய்யப்பட வேண்டும் பயனாளிகள் தடுப்பூசி போட்ட பின்னர் கோ-வினிலிருந்து தடுப்பூசி சான்றிதழ்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு டிஜிட்டல் அல்லது சான்றிதழ் வடிவத்தில் வழங்கப்படுகின்றன என்று கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.

சந்தேகம் எழுகிறது
தற்போது நடந்துள்ள முகாம்களில் வழங்கப்படும் ஊசி மருந்துகளின் உள்ளடக்கங்கள் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் உடனடியாக விசாரிக்கப்படாவிட்டால் , அவை சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால் அவை மீண்டும் நிகழும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த போலி முகாம்கள் குறித்து விசாரித்து அடுத்த இரண்டு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலாளர் ஹரி கிருஷ்ணா திவேதிக்கு அந்த கடிதத்தில் பூஷண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications