காந்தி ஜெயந்தி வரை டைம் தரோம்.. அதுக்குள்ள விவசாய சட்டங்களை ரத்து பண்ணுங்க.. விவசாய சங்கம் அறிவிப்பு
டெல்லி: இந்தாண்டு காந்தி ஜெயந்திக்கு முன் மத்திய அரசு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாரதிய கிஷான் யூனியன் சங்கத்தின் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்,
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.

காந்தி ஜெயந்தி
இந்நிலையில், பாரதிய கிஷான் யூனியன் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த வவிசாய சட்டங்களை ரத்து செய்ய அக்டோபர் 2 ஆம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளிக்கிறோம். அதுவரையும் அரசு விவசாய சட்டத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்துத் திட்டமிடப்படும்" என்றார்.

தீவிரமடையும் போராட்டம்
மேலும், அரசு அழுத்தத்தில் இருக்கும்போது எவ்வித பேச்சுவார்த்தையையும் நடத்த மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதற்குள் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசுக்குக் கெடு விதித்துள்ளன. விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கண்ணீர்விட்ட விவசாயச் சங்க தலைவர்
டெல்லியில் விவசாய சட்டங்களை ரத்து செய்ய நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டது. அப்போது விவசியாகள் ஏமாற்றப்படுவதாகக் கூறி ராகேஷ் டிக்கைட் கண்ணீர் வடித்தார். இந்தப் பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதையடுத்து ஹரியான மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர் போராட்ட களத்தில் போராடும் விவசாயிகளுடன் ஒன்றிணைந்தனர்.

உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் இலவச மின்சாரம், விவசாய கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் உள்ளிட்ட இரண்டில் மட்டும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த 1.5 ஆண்டுகள் விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க தாயாராகவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயச் சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications