நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது.. முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா?
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முத்தலாக் மற்றும் குடியுரிமை சட்டமசோதாக்காள் ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப் படுகிறது.
முத்தலாக் சட்டத்திருத்த மசோதா 2018, மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை, முத்தாலக் சட்டத்தால் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்கவே இச்சட்டதிருத்தம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.அதேபோல கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்து நிறைவேற்றப்பட்டது.
அந்த சட்டத் திருத்தத்தின் படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லீம் அல்லாத பிரிவினருக்கு வடகிழக்கு மாநிலத்தில் குடியுரிமை பெற வழி வகை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
ஆனால் எதிர்கட்சிகள் அனைவரும் இந்த இரு மசோதாக்களுக்கும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முத்தலாக் திருத்தத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளும், குடியுரிமை சட்டத்துக்கு வடகிழக்கு மாநில மக்களும் தீவிர எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையில் உள்ளதால் ஆளும் பாஜக அரசு லோக்சபாவில் மசோதாவை எளிதாக நிறைவேற்றியது. ஆனால் ராஜ்ய சபாவில் அந்த நிலை இல்லாததால் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது கடினம் என்று கருதப்படுகிறது.
இவை தவிர ஆதார் திருத்த மசோதா, நிறுவனச் சட்ட மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைவதால், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications