பாகிஸ்தானுக்கு ஆதரவாக போஸ்ட் போடுறவங்களை விடாதீங்க.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அட்வைஸ்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி அடைந்திருக்கும் நிலையில், இந்திய அரசுக்கு எதிராக நடக்கும் கருத்து பிரசாரங்களை தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பான கடுமையான கண்காணிப்பு அவசியம் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
பொய் பிரசாரங்கள், தவறான தகவல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.

நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தியாவில் இருந்து கொண்டே சிலர் இந்த ஆபரேஷனை விமர்சிப்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து பொய்யான செய்திகளை வெளியிடும் சமூக ஊடக கணக்குகள் மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய அக்கவுண்ட்டுகள் உடனடியாக பிளாக் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இந்த தகவலை 'இந்தியா டுடே' செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக இயங்கும் சமூக ஊடக கணக்குகளை முடக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 69A (IT Act, 2000)-ன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம். சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது இணைய ஊடகங்கள் மீதும் இந்த நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த உத்தரவு வருவதற்கான காரணம், இந்திய போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக போலி தகவல்களை பாகிஸ்தான் பகிர்ந்தது. இதனை இங்கிருந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இயங்கும் சில அக்கவுண்ட்டுகள் ஷேர் செய்திருந்தன. மட்டுமல்லாது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர் என்றும் போலி தகவல்கள் பரப்பப்பட்டன. இவை அனைத்தும் 2021ம் ஆண்டு நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட படங்களாகும்.
இந்த முறை நாம் நடத்திய தாக்குதலில், வீரர்கள் யாரும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. மாறாக உயர் தொழில்நுட்பங்களை கொண்டு மட்டுமே எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. நேற்று அதிகாலை 1.05 மணி தொடங்கிய தாக்குதல் சுமார் 1.30 மணிக்கு முடிவடைந்திருக்கிறது. மொத்த தாக்குதல் நேரம் 25 நிமிடங்கள்தான். உயிரிழப்பு எண்ணிக்கை 70க்கும் அதிகமாக இருக்கலாம் என்று இந்திய ராணுவம் கணித்திருக்கிறது. இப்படி இருக்கும்போது இந்திய போர் விமானம் எப்படி வீழ்த்தப்பட்டிருக்கும்? நம் வீரர்கள் எப்படி கைதாகியிருப்பதார்கள்? என்று கேள்வி எழுகிறது.
எனவே ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக போலியான செய்தியை பரப்புவோர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இது தவிர, வளைகுடா மற்றும் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications