"லாக்டவுன் சரியான நேரத்தில் பயனுள்ள முடிவு".. ஒரு வேளை ஊரடங்கு இல்லாட்டி இந்தியா என்னவாகியிருக்கும்!
டெல்லி: நாடு முழுவதும் லாக்டவுன் என்பது சரியான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவ்வாறு அறிவிக்காவிட்டிருந்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்திருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக மத்திய அரசு கூறுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. லாக்டவுன் அமல்படுத்தியது, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, தீவிர கண்காணிப்பு நெட்வொர்க்கை ஏற்படுத்தியது ஆகியவையே காரணம்.

பொருளாதாரம்
லாக்டவுன் தளர்த்தப்பட்டவுடன், பொருளாதாரத்தை மீட்வது குறித்தும் மக்களின் துயரை துடைப்பது குறித்தும் சுகாதாரத் துறையின் செயல்பாடுகளை மேலும் அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகளை வழங்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் கூறுகையில் லாக்டவுன் மூலம் கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தை குறைத்து விட்டோம். இல்லாவிட்டால் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கும்.

சரியான நேரம்
இந்த லாக்டவுன் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட பயனுள்ள முடிவு என்பதை கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே தெரிகிறது. ஒரு வேளை நாம் இந்த லாக்டவுன் முடிவு எடுக்காமலும் பின்பற்றாமலும் இருந்திருந்தால் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்திருக்கும் என்றார்.

ரத்த மாதிரிகள்
இதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் எஸ் கே சிங் கூறுகையில் கண்காணிப்பு என்பதுதான் கொரோனாவுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாகும். இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டவுடன் கண்காணிப்பை தொடங்கிவிட்டோம். தற்போது வரை கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 9.45 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

14 நாட்கள்
கடந்த 28 நாட்களில் 15 மாவட்டங்களுக்கு மேல் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதித்தோர் இல்லை என சுகாதாரத் துறையின் இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications