மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது- மத்திய அரசு
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அந்த பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கின.
இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளித்து வருகிறது. ரூ 1,977 கோடியில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும் இதுவரை கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

ரூ 1627 கோடி
இந்த தொகையில் 82 சதவீதம் அதாவது ரூ 1627 கோடியை ஜப்பானை சேர்ந்த நிறுவனம் வழங்கும். மீதமுள்ள 360 கோடி ரூபாய் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஒதுக்கும் என தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என ஆர்டிஐ மூலம் சமூக ஆர்வலர் பாண்டியராஜன் கேட்டிருந்தார்.

மத்திய அரசு பதில்
அதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அளித்த பதிலில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாண்மை நிறுவனத்தை நியமிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமான பணிகள் தொடங்கும் தேதி குறித்து கூற இயலாது என தெரிவித்துள்ளது.

சுற்றுச்சுவர்
இந்த நிலையில் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் 92 சதவீதம் முடிந்துள்ளதாகவும் இதற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஆர்டிஐயில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டு ஒரு 4 ஆண்டுகள் அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு 3 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த பணிகளை உடனே தொடங்கியிருந்தால் இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கே வந்திருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. 7 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் திட்ட மேலாண்மை நிறுவனமே இறுதி செய்யப்படவில்லை என்பதால் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்குவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்றே தெரிகிறது.

நில ஒப்பந்தம்
நில ஒப்பந்தம் போடும் பணி, கையகப்படுத்தும் பணிகளில் தொடர்ந்து காலதாமதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் காலதாமதம் என்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் விழாவுக்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். அண்மையில் தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் உள்ளிட்டோர் போய் இன்னும் கட்டுமானமே தொடங்கவில்லை, அதற்குள் நட்டா இப்படி ஒரு பொய்யை சொல்லியுள்ளார் என விமர்சித்தனர். ஆனால் பாஜகவோ எய்ம்ஸ் கட்டுமானத்தை தொடங்க 90 சதவீதம் பணிகள் முடிந்ததாகவே ஜே பி நட்டா தெரிவித்திருந்தார் என விளக்கமளித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications