மத்திய அரசு கன்ட்ரோலில் தான் பி.எம்.கேர்ஸ் நிதியம்..ஆனால் ஆர்டிஐ-ன் கீழ் வராதாம்... இன்னொரு சர்ச்சை
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது; இருப்பினும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் அது வராது என மத்திய அரசு தெரிவித்திருப்பது புது சர்ச்சையாக உள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது பிஎம் கேர்ஸ் நிதியம். ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி போன்றவை இருக்கும் போது இந்த புதிய நிதியம் உருவாக்கம் தொடக்கம் முதலே சர்ச்சையாக இருந்து வருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டங்களின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு தொடக்கத்தில் இது மத்திய அரசின் நிதியம்தான் என பதிலளிக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் இந்த நிதியத்துக்கான அறக்கட்டளையின் இணையதளத்திலோ, அரசால் உருவாக்கப்பட்டது அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் பிஎம் கேர்ஸ் நிதியம் தொடர்பான எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் பிஎம் கேர்ஸ் நிதியம் தொடர்பாக பல்வேறு சரமாரியான கேள்விகளை முன்வைத்தும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் பிஎம்கேர்ஸ் நிதியம் தொடர்பாக மத்திய அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நேற்று புதிய ஒரு வியாக்யானம் தந்துள்ளது. அதாவது பிஎம் கேர்ஸ் நிதியமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; இருந்த போதும் இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற முடியாது.
ஏனெனில் தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள் இந்த நிதியத்துக்கு நிதி உதவி அளித்திருக்கின்றன. அதனால் அவை பற்றிய விவரங்களை எல்லாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்க முடியாது என குழப்பமான ஒரு பதிலை சொல்லி இப்போது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications