உ.பி. தேர்தல்: OBC ஓட்டுகளை அள்ள பிளான்! இடஒதுக்கீட்டுக்கான கிரீமிலேயரில் வருகிறது திருத்தம்!
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC ஓபிசி) வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பில் (கிரீமிலேயர்) திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
1999-ம் ஆண்டு மத்திய அரசு பணிகளில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இந்த 27% இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கிரீமிலேயரும் இடஒதுக்கீடும்
இதுதான் மண்டல் கமிஷன் வழக்கு அல்லது இந்திரா சஹானி வழக்கு எனப்படுகிறது. இவ்வழக்கில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யார் யார் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்பதற்கான கிரீமிலேயர்- வருமான வரம்பும் நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஓபிசி அனைவருமே 27% இடஒதுக்கீடு உரிமையை அனுபவிக்க முடியாது.

கிரீமிலேயர் என்பது என்ன?
ஓபிசியில் கிரீமிலேயர் என்கிற வசதி படைத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தவிர எஞ்சியவக்ரளுக்கு மட்டும்தான் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு ரூ1 லட்சத்துக்கு கூடுதலாக வருமானம் பெறுகிறவர்களின் பிள்ளைகளுக்கு 27% இடஒதுக்கீடு உரிமை இல்லை என முதலில் கிரீமிலேயர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேநேரத்தில் இத்தகைய வருமான வரம்பை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்ய வேண்டும் என்பதும் விதி.

இதுவரை திருத்தங்கள்
ஆனால் 1993-க்குப் பிறகு 2004-ல் இந்த வருமான வரம்பானது ரூ4.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2013-ம் ஆண்டு ரூ6 லட்சமாகவும் 2017-ல் ரூ8 லட்சமாகவும் இது உயர்த்தப்பட்டது. இந்த வருமான வரம்பை ரூ15 லட்சம் என நிர்ணயிக்க வேண்டும் என்பது பொதுவாக கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிற கோரிக்கை. மத்திய பாஜக அரசு இந்த கிரீமிலேயர் முறை குறித்து ஆலோசித்து பல்வேறு மாற்றங்களை செய்யவும் முயற்சித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தேர்தலுக்காக மத்திய அரசு திடீர் முடிவு?
இந்நிலையில் தற்போதைய வருமான வரம்பு ரூ8 லட்சத்தை ரூ12 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களது வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் அம்மாநில தேர்தல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாகவே மத்திய அரசு இது தொடர்பான முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications