"டெல்லி சலோ"! பஞ்சாபில் இன்று ரயில் மறியல்! விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்துகிறது. பஞ்சாபில் இன்றைய தினம் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுகிறார்கள்.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை ஒடுக்க டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் வரமுடியாதபடி தடுப்புகள் அமைத்து எல்லை மூடப்பட்டது. இதையடுத்து தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
எனினும் டெல்லி எல்லையான சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டீகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன் வைத்தனர். ஆனால் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து கடந்த 13 ஆம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
இதை தடுக்க கடந்த 12 ஆம் தேதியே இரு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல தொடங்கினர். டெல்லி சலோ என்ற இந்த போராட்டத்துக்கு பெயரும் வைத்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்கள் நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் சென்றது. அது போன்றதொரு போராட்டத்தை நடத்த 6 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்களுடன் டெல்லி சென்றுள்ளனர். பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பாஜக அரசுக்கு அவரது குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற சுவாமிநாதன் கூறி உள்ளதை பாஜக அரசு செய்யவில்லை என விவசாயிகள் கடுமையான விமர்சித்தனர்.












Click it and Unblock the Notifications