மத்திய அரசு திடீர் முடிவு- நாகாலாந்தில் ஆயுத படை சட்டம் வாபஸ் பெறுவது குறித்து ஆராய குழு அமைப்பு
டெல்லி: நாகாலாந்து மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு அடுத்த 45 நாட்களில் ஆயுத படை சட்டத்தை நாகாலாந்து மாநிலத்தில் இருந்து வாபஸ் பெறுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்.
அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
நாகாலாந்து மாநிலத்தில் மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தில் 14 அப்பாவி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். நாகாலாந்து தனிநாடு கோரும் பயங்கரவாதிகள் என சந்தேகித்து 14 அப்பாவித் தொழிலாளர்களை ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது.
மன்னிப்பு கேட்ட ராணுவம்
இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாகாலாந்து பொதுமக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி ராணுவ முகாம்களை தீக்கிரையாக்கினர். இச்சம்பவத்துக்கு ராணுவம் வருத்தம் தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வருத்தம் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்த குழு அமைத்தது.
நாகாலாந்து கோரிக்கை
ஆனால் ஆயுதப் படையினர் தேடுதல் நடத்த, தாக்குதல் நடத்த சிறப்பு அதிகாரம் வழங்கக் கூட சட்டம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் உள்ளன. இதனால் ராணுவத்தினர் கண்மூடித்தனமாக விசாரணைகள் இல்லாமல் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை முடிவுக்குக் கொண்டு அத்தகைய ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வடகிழக்கு மாநிலங்களில் வலுத்தது. நாகாலாந்து மாநில அமைச்சரவை கூடி இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியது. நாகாலாந்து சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூரிலும் எதிரொலி
இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் மணிப்பூர் மாநிலத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம், மணிப்பூர் தேர்தலில் பிரதான அம்சமாக இடம்பெறலாம்; அது பாஜகவுக்கு நெருக்கடி தரும் என்கிற செய்திகளும் வெளியாகி இருந்தன.
நாகாலாந்தில் வாபஸ்?
இந்நிலையில் திடீரென அஸ்ஸாம், நாகாலாந்து மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நாகாலந்து மாநிலத்தில் வாபஸ் பெறுவது தொடர்பாக ஆராய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாகாலாந்து, ராணுவம் என முத்தரப்பையும் உள்ளடக்கிய இந்த குழு அடுத்த 45 நாட்களில் தமது அறிக்கையைத் தாக்கல் செய்யும். நாகாலாந்து படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.