8 இந்தியர்களுக்கு மரண தண்டனை.. கத்தாரில் டாப் வழக்கறிஞரை தேடும் இந்திய தூதரகம்.. அடுத்தது என்ன?
டெல்லி: கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களை விடுவிக்கவும் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் இந்தியா மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் பணியாற்றி வந்தனர்.

அவர்கள் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் ஆவர்.
இவர்கள் 8 பேரும் கத்தார் நாட்டின் சக்தி வாய்ந்த நீர் மூழ்கி கப்பலின் ரகசியங்களை இஸ்ரேலுடன் பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத் துறையால் தோஹாவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது விவரம் இந்திய அரசுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மத்தியில்தான் தெரிவிக்கப்பட்டது.
அது போல் அந்த 8 பேரின் குடும்பத்தினருடனும் அவர்கள் பேச வைக்கப்பட்டன. அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தூதரகத்தின் மூலம் மத்திய அரசு எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் நேற்று முன் தினம் அந்த 8 பேருக்கும் மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரங்களை இந்திய அரசும் கத்தார் அரசும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தை இந்திய அரசு அணுகி கத்தாரில் உள்ள தலைச் சிறந்த வழக்கறிஞரை சந்தித்து அவர்களிடம் 8 பேரின் வழக்கு விவரங்களை கொடுத்து மேல்முறையீடு செய்ய சொல்லியுள்ளது. இந்த மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கத்தார் நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் அரசு வழக்கறிஞரையும் இணைத்துக் கொள்ளவும் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அரசு கூறியுள்ளது.
தூதரகமும் கத்தாரில் உள்ள முன்னணி வழக்கறிஞர்களை நாடி வருகிறது. அந்த 8 இந்தியர்கள் ஏன் கைது என்பது குறித்து கத்தார் அதிகாரிகள் சரியான காரணத்தை இதுவரை விளக்கவில்லை. அது போல் மரண தண்டனையை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ கோரி கத்தாரில் கருணை மனுவையும் தயார் செய்து வருகிறது.
இரு நாடுகள் இடையேயும் நல்ல நட்புறவு உள்ளதாலும் வியாபார ரீதியிலான ஒப்பந்தங்கள் உள்ளதாலும் தோஹா தூதரகத்தை இந்திய அரசு அணுகியுள்ளது. கத்தாரில் 8 லட்சம் இந்தியர்கள் பணிநிமித்தமாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications