'இப்போது ஆப்கானிஸ்தான்.. அடுத்து காஷ்மீர் தான் அவர்களின் குறி..' எச்சரிக்கும் இந்திய ராணுவ தளபதி
டெல்லி: ஆப்கனில் நிலைமை சரியான பிறகு, அங்கிருந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே எச்சரித்துள்ளார்.
Recommended Video
ஆப்கனை விட்டு அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறிய நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீண்டும் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. இப்போது அங்கு உச்சக்கட்ட குழப்பம் நிலவும் நிலையில், விரைவில் நிலைமை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளது உலகெங்கும் உள்ள அடிப்படைவாதிகளுக்கு உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் வரும் காலங்களில் பயங்கரவாத தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அதிகரிக்கும் ஊடுருவல் முயற்சி
இந்நிலையில், ஆப்கனில் நிலைமை சரியான பிறகு, அங்கிருந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியா டுடே ஊடகம் நடத்திய கான்கிலேவ்-இல் பங்கேற்றுப் பேசிய இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே, "ஜம்மு -காஷ்மீரில் இப்போது பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஆனால் இதற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் நேரடியாகத் தொடர்பு இருக்கிறதா என இப்போது நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆப்கன் நிலை
ஆனால் கடந்த காலத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயம் என்னவென்றால், முந்தைய தாலிபான் ஆட்சியின்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பல்வேறு வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் ஜம்மு -காஷ்மீரில் ஊடுருவினர். எனவே, வரும் காலங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரானதும், அங்கிருந்து இருந்து ஜம்மு -காஷ்மீருக்கு மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆப்கனில் பயிற்சி பெற்ற பல்வேறு பயங்கரவாதிகள் வரும் காலங்களில் காஷ்மீரில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட முயல்வார்கள்.

முறியடிப்பு
அதேநேரம் இதுபோன்ற எந்த ஒரு நிகழ்விற்கும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எல்லையிலேயே அவர்களைத் தடுக்க எங்களிடம் மிகவும் வலுவான பாதுகாப்பு அமைப்பு உள்ளது. 2000களின் முற்பகுதியில் எப்படி பயங்கரவாதிகளை நாம் கையாள வேண்டி இருந்ததோ, அதே நிலை தான் இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு -காஷ்மீரில் கடந்த சில நாட்களாகச் சிலரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்று வருகின்றனர். இதைக் கவலைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்ட ராணுவ தளபதி, "அவர்களுக்கு அமைதி பிடிக்கவில்லை. மக்களுக்காக அனைத்தையும் செய்வதாகப் பயங்கரவாதிகள் கூறினால், அவர்கள் ஏன் சொந்த மக்களைக் கொல்கிறீர்கள். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கான முயற்சி தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா பாகிஸ்தான் உறவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேசிய ராணுவ தளபதி எம்.எம் நரவனே, "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் பிப்ரவரி முதல் நான்கு மாதங்களுக்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் ஜூலை இறுதியில் இருந்து ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. 2003ஆம் ஆண்டுக்கு முன் என்ன நிலை இருந்ததோ அதே நிலை மீண்டும் ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த ஒரு மாதமாக, ஊடுருவல் முயற்சிகளும் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் மூன்று முக்கிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications