மீண்டும் சீனா அநியாயம்.. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஆதரவு இல்லை.. இந்தியா ஏமாற்றம்
Recommended Video
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் வாயிலாக, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர், மவுலானா மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுவிட்டது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசார், கந்தகார் விமான கடத்தலின்போது பிணையக் கைதிகளை மீட்பதற்காக காஷ்மீர் சிறைச்சாலையிலிருந்து தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு நபர்.
இதன் பிறகு இந்தியா மீது மேலும் கோபம் கொண்டு, பல்வேறு தாக்குதல்களை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்தி வருகிறது. அதில் சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் ஒன்றாகும்.
இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் கோபம் மவுலானா மசூத் அசார் மீது திரும்பி உள்ளது. ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், மூன்று முறை மவுலானா மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக்கோரி இந்தியா மேற்கொண்ட முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டு இருந்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பே மாட்டினோம்.. போலீஸ் விசாரிக்கவில்லை.. பொள்ளாச்சி கேங் பரபர வாக்குமூலம்!
தற்போது மீண்டும், மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நாடு கொண்டு வந்து இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 10 நாடுகள் இதற்கு ஆதரவு அளித்தன.
மசூத் அசார் பெயரை ஐநாவின் தடை செய்யப்பட்ட தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரும், தீர்மானத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், சீனா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதனால், மவுலானா மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், இந்த முடிவு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவரை, சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட பிற நாடுகளுக்கு இந்தியா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றும், வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பு நாடான சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. 2009, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மவுலானா மசூத் அசார் ஆதரவு நிலைப்பாட்டை தான் சீனா எடுத்திருந்தது. தற்போது நான்காவது முறையாக மவுலானா மசூத் அசாருக்கு ஆதரவாக சீனா நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மவுலானா மசூத் அசாருக்கு, பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதால், அதன் நட்பு நாடான சீனா, இதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.