"மொத்தம் 25!" இந்தியாவுக்கு கிட்ட வரும் சீனா.. எல்லையில் தயார் நிலையில் அதிநவீன விமானங்கள்! பரபரப்பு
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், இது குறித்து அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இரு தரப்பு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வந்தது.
அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் இந்த நிலை மோசமடைந்தது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

ராணுவம்
இரு தரப்பு ராணுவமும் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதேபோல எல்லையில் கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீடுகளையும் இரு தரப்பு ராணுவங்களும் மேற்கொண்டு வருகிறது. இதனால் எல்லையில் பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் அவை பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை.

சீனா
எல்லையில் இருக்கும் ராணுவத்தை வாபஸ் பெற இரு தரப்பு ராணுவமும் தயாராக இல்லை. இந்தச் சூழலில் இந்திய எல்லையில் சீன ராணுவ உள்கட்டமைப்பு மேம்பாடு அபாயகரமானது என அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தால். மேலும், சீன விமானப்படை கிழக்கு லடாக் செக்டார் அருகே ஹோட்டன் விமான தளத்தில் இரண்டு டஜன் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சீன விமானப்படை தனது 25 விமானங்களை அதன் விமானிகள் உடன் ஹோட்டன் விமான தளத்தில் வைத்திருக்கிறது.

எதற்கு
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "சீனர்கள் முன்பு MiG-21 ரக போர் விமானங்களை அங்கு வைத்து இருந்தனர். ஆனால் அதை நீக்கிவிட்டு, அதிக திறன் மற்றும் அதிநவீன விமானங்களை மாற்றி உள்ளனர். மேலும், அதிக எண்ணிக்கையில் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார். சீன விமானப்படை இந்திய எல்லைக்கு அருகில் புதிய விமான தளங்களை உருவாக்குகிறது. இது குறைந்த உயரத்தில் இருந்து அவர்கள் மிஷன்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

சீனா
அமெரிக்க ஜெனரல் சார்லஸ் ஏ ஃப்ளைன் சீனாவின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கவனித்துக் கூறி இருந்தார். அதாவது அவர், "வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்டில் உருவாக்கப்படும் சில உள்கட்டமைப்புகள் ஆபத்தானவை என்று நான் நினைக்கிறேன்" என்றார். அங்கு மட்டுமின்றி, வடக்கே லடாக்கிலிருந்து வடகிழக்கில் அருணாச்சல பிரதேசம் வரை இந்தியாவுடனான எல்லையில் பல இடங்களில் சீனா கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது.

கண்காணிப்பு
எனவே, இந்தியத் தரப்பு எல்லையில் சீனாவின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. குறிப்பாக எல்லையின் ஜின்ஜியாங் மற்றும் திபெத் பிராந்தியங்களில் உள்ள கார் குன்சா, காஷ்கர், ஹாப்பிங், டோங்கா டிசோங், லின்சி மற்றும் பங்கட் விமானப்படைத் தளங்களில் சீனாவின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாகக் கவனித்து வருகிறது இந்தியா! எல்லையில் கடந்த சில காலங்களாகவே சீனா தனது உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது.

இந்தியா
எல்லையில் உள்ள கட்டுமானங்களை மேம்படுத்துவது, ஓடுபாதையின் நீளத்தை நீட்டிப்பது, பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுதல் படைகளை அனுப்புதல் போன்ற நடவடிக்கையை எடுக்கிறது. இது எல்லையில் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனப் படைகளின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. சுகோய்-30, மிக்-29 மற்றும் மிராஜ்-2000 விமானங்களை இந்தியாவும் தனது எல்லை தளங்களில் நிலை நிறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications