கொரோனா வைரஸை இனி சீனா வைரஸ்ன்னு சொன்னீங்கன்னா.. சீனா தூதர் கோபத்துடன் அளித்த விளக்கம்
டெல்லி: கொரோனா வைரஸை நாங்கள் உருவாக்கவில்லை.. வேண்டுமென்றே பரப்பவில்லை.. எனவே "சீன வைரஸ்" அல்லது "வுஹான் வைரஸ்" போன்ற சொற்களை பயன்படுத்துவது தவறு என சீனா தெரிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் பயங்கர வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸை சீனாதான் கவனக்குறைவாக உலகிற்கு பரப்பிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் விவாகரத்தில் சீனா தொடர்ந்து உண்மையை மறைத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்திற்கு சீன மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியது வரும் என்றும் அமெரிக்கா கடுமையாக எச்சரித்தது.
கொரோனா பாதிப்பு: நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைக்க மாணவர்கள் வேண்டுகோள்
சீனாவின் அலட்சியம்
அத்துடன் அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட அமெரிக்காவின் பல்வேறு தலைவர்கள் கொரோனா வைரஸை, சீன வைரஸ், வுகான் வைரஸ், சைனிஸ வைரஸ் என்று அழைத்தனர். சீனாவின் அலட்சியமே இவ்வளவு பிரச்னைக்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.
அமெரிக்காவுக்கு பதிலடி
இதனால் கடும் கோபம் அடைந்த சீனா, சீன வைரஸ் என்று அழைத்த அமெரிக்காவை கடுமையாக எச்சரித்ததுடன், அமெரிக்கா தான் இந்த வைரஸை பரப்பிவிட்டதாக குற்றம்சாட்டியது.. இதை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்தது. இரு நாடுகளும் கொரோனா வைரஸ் பிரச்சனையில் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டன.
சீன வைரஸ் அல்ல
இந்நிலையில் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கொரோனா வைரஸ் குறித்து கூறுகையில், " கொரோனா வைரஸை நாங்கள் உருவாக்கவில்லை.. வேண்டுமென்றே பரப்பவில்லை.. எனவே "சீன வைரஸ்" அல்லது "வுஹான் வைரஸ்" போன்ற சொற்களை பயன்படுத்துவது தவறு. சீன மக்களை குற்றம்சாட்டுவதைவிட்டுவிட்டு, தொற்றுநோய்க்கு சீனாவைப் போல் விரைவான பதில் நடவடிக்கையில் ஈடுபடுவதில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவுக்கு நன்றி
கொரோனா வைரஸ் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகப்பெரியது. இரு நாடுகளும் தகவல்தொடர்புகளைப் பேணி வருகின்றன. கடினமான காலங்களில் தொற்றுநோயைச் சமாளிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன. இந்தியத் தரப்பு சீனாவுக்கு மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளது. தொற்றுநோய்க்கு எதிரான அதன் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆதரித்தது. "அதற்காக இந்தியாவுக்கு நாங்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்கிறோம்," என்று அவர் கூறினார்