பாங்காங் ஏரி குறுக்கே பாலம் கட்டும் சீனா.. மத்திய அரசு முதல்முறையாக விளக்கம்! பரபர கருத்து
டெல்லி: பாங்காங் ஏரியின் குறுக்கே சீனா பாலம் கட்டி வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
Recommended Video

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே உறவு சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. இரு தரப்பினருக்கும் இடையேயான தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையேயான உறவு மிக மோசமாக மாறியது.

இந்தியா சீனா
இதையடுத்து எல்லையில் இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வீரர்களைக் குவித்து வருகிறது. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் குறுக்கே ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா பாலம் கட்டுவதாகக் கடந்த மாதம் தகவல் வெளியானது. இது தொடர்பாகப் புவி உளவுத் துறை செயற்கைக்கோள் படங்களிலும் கூட, அது தெளிவாகத் தெரிகிறது.

சீனா கட்டும் பாலம்
இந்த பாலம் ஏரியின் இரு கரைகளும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராணுவ வீரர்களையும் கனரக ஆயுதங்களையும் சீனாவால் மிக விரைவாக எடுத்துச் செல்ல முடியும். 8 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலம், சீன கள மருத்துவமனைகள் மற்றும் வீரர்கள் தங்குமிடங்கள் காணப்பட்ட பாங்கோங்கின் வடக்குக் கரையில் உள்ள சீன ராணுவத் தளத்திற்கு தெற்கே மிக அருகிலேயே அமைந்துள்ளது.

மத்திய அரசு
இது நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய அச்சுறுத்தல் என்றும் இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனா சட்ட விரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இடத்தில் பாங்காங் ஏரியின் குறுக்கே சீன பாலம் கட்டப்படுகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கவனத்தில் கொண்டுள்ளது
இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ள பதிலில், "பாங்காங் ஏரியில் சீனாவால் பாலம் கட்டப்படுவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. கடந்த 1962 முதல் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் பகுதிகளில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்திய அரசு இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மதிக்க வேண்டும்
ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை அரசு பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளது, மேலும் மற்ற நாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை
கடைசியாகக் கடந்த ஜன. 12இல் இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அரசு," சீனா ராணுவ உயர் அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் 3 கொள்கைகள் அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது. அதாவது, (i) இரு தரப்பினரும் LAC ஐ கண்டிப்பாக மதிக்க வேண்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டும்; (ii) எந்த தரப்பும் ஒருதலைபட்சமாக நிலைமையை மாற்ற முயலக் கூடாது ( iii) இரு தரப்புக்கும் இடையேயான அனைத்து ஒப்பந்தங்களும் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications