"மாய" வலையை வீசும் சீனா.. தடுமாறுதே வங்கதேசம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் காலி.. உற்று பார்க்கும் இந்தியா
டெல்லி: சீனா கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு உலக நாடுகளுக்குக் கடன் கொடுத்து தனது மாய வலையில் வீழ்த்தி வருகிறது. இப்போது வங்கதேசம் பக்கம் சீனா தனது பார்வையைத் திரும்பியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானை முழுக்க முழுக்க தன்னை சார்ந்து இருக்கும் நிலைக்குச் சீனா தள்ளிவிட்ட நிலையில், இப்போது வங்கதேசத்திலும் அதையே முயல்கிறது. அங்கு ஒரு வலுவான அரசியல் தலைமை இல்லாததால் சீனாவுக்கு எளிதாக விழலாம் என்று அஞ்சப்படுகிறது.
சீனா கடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கும் உள்ள நாடுகளுக்குக் கடன்களைக் கொடுத்து தனது வலையில் வீழ வைத்து வருகிறது. இதைச் சர்வதேச வல்லுநர்கள் கடன் ராஜதந்திரம் என்றே கூட குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரு நாட்டிற்குக் கடனைக் கொடுத்துவிட்டு, அதன் மூலம் அந்த நாட்டை லாக் செய்வதே சீனாவின் இந்த பிளான்.

சீனாவின் மாயவலை
பாகிஸ்தான், இலங்கை, மியான்மர், கம்போடியா எனப் பல நாடுகள் கடனை வைத்து சீனா விரிக்கும் இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டன. இது தொடங்கிப் பல நாடுகள் சீனாவின் இந்த வலையில் சிக்கியுள்ளது. இந்தச் சூழலில் தான் சீனா தனது பார்வையை வங்கதேசம் பக்கம் திருப்பியுள்ளது. இது இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகானும் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பாகிஸ்தான் காலி
ஏற்கனவே சீனாவின் இந்த மாய வலை பாகிஸ்தானைக் காலி செய்துவிட்டது. இப்போது பாகிஸ்தான் முழுக்க முழுக்க சீனாவை நம்பியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது பாகிஸ்தானின் 80%க்கும் அதிகமான ராணுவத் தளவாடங்கள் சீனாவிடம் இருந்து தான் போகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கடன்கள் இருப்பதால் மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆயுதம் தர முன்வருவதில்லை. ஆனால் சீனா மட்டும் மேலும் மேலும் கடனில் ஆயுதங்களைக் கொடுத்து பாகிஸ்தானை முழுமையாகத் தன்வசப்படுத்த முயல்கிறது.
தற்போதுள்ள டேட்டாவை வைத்துப் பார்த்தால் சீனாவிடம் இருந்து வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்தவே பாகிஸ்தானுக்கு 40 ஆண்டுகள் வரை ஆகும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வேறு வழியில்லாமல் சீனாவைச் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்து வங்கதேசத்தையும் இதில் சிக்க வைக்கச் சீனா பார்க்கிறது.
தலைமை இல்லாமல் தடுமாறும் வங்கதேசம்
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி வங்கதேசத்தில் கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு அந்நாட்டின் பொருளாதாரம் தடுமாறி வரும் நிலையில், சீனா அங்கு நுழைய முயன்று வருகிறது. ஷேக் ஹசீனா இருந்தவரை அவர் இந்தியா மற்றும் சீனா என இரு நாடுகளையும் சரிவரக் கையாண்டார். ஆனால், இப்போதிருக்கும் முகமது யூனுஸின் இடைக்கால அரசு சீனாவை நோக்கி வேகமாகவே நகர்கிறது எனச் சொல்லலாம்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கச் சீனா முயல்கிறது. இதற்காகக் கடந்த ஜூன் மாதம் குன்மிங்கில் ஒரு முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்தது. அதில் வர்த்தகம், விவசாயம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தான் வங்கதேசம் இடையேயான உறவும் கூட மேம்பட்டே வருகிறது. முதலில் பாகிஸ்தானில் நடந்த போர்ப் பயிற்சியில் வங்கதேசம் பங்கேற்றது.
பாகிஸ்தான் வங்கதேசம்
அதேபோல கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் இருந்து 50,000 டன் அரிசி கொள்முதல் ஒப்பந்தத்தையும் வங்கதேசம் போட்டது. கடந்த 1971ல் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. அப்போது முதல் இரு நாடுகளும் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட்டதே இல்லை. ஆனால், இப்போது வர்த்தக உறவுகளை மீண்டும் தொடங்கி இருக்கிறது. பரஸ்பரப் பொருளாதாரத் தேவைகள் ஒரு பக்கம் என்றாலும் சீனாவின் செல்வாக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது.
சிக்கல் தான்
சீனா-பாகிஸ்தான்-வங்கதேசம் என அண்டை நாடுகள் ஒரே புள்ளிக்கு வருவது இந்தியாவைத் தனிமைப்படுத்தக்கூடும். சீனாவின் இந்தக் கடன் மாயவலை இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பைச் சீர்குலைக்கலாம் என்று ஜெனரல் சவுகான் எச்சரிக்க இதுவே காரணம். இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியா தனது பொருளாதார மற்றும் ராஜதந்திரச் செல்வாக்கை வலுப்படுத்த வேண்டும். பிராந்தியக் கூட்டணிகளை மேம்படுத்த வேண்டும்.
இந்தியா தனது பிராந்தியச் செல்வாக்கைப் பராமரிக்கவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications