லடாக் தொடக்கம்தான்.. எங்களுக்கு நடந்ததுதான் இந்தியாவிற்கும் நடக்கும்.. எச்சரிக்கும் திபெத் தலைவர்
லடாக்கில் சீனாவின் அத்துமீறல் என்பது தொடக்கம்தான், சீனா இனிமேல்தான் இந்தியாவில் 4 பெரிய அத்துமீறல்களை நிகழ்த்த போகிறது என்று திபெத் தலைவர் லோப்சாங் சங்கே தெரிவித்துள்ளார்.
டெல்லி: லடாக்கில் சீனாவின் அத்துமீறல் என்பது தொடக்கம்தான், சீனா இனிமேல்தான் மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்த போகிறது என்று திபெத் தலைவர், லோப்சாங் சங்கே எச்சரித்துள்ளார்.
திபெத்தை சீனா ஆக்கிரமித்து தனது நாட்டின் ஒரு பகுதியாக கொண்டு வந்துவிட்டது. சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பி, தலாய் லாமா போன்றோர் இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்தனர்.
ஆக்கிரமித்து சேர்த்துக் கொண்டாலும் திபெத்திற்கு என்று சில சுதந்திரம், கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. திபெத்தில் சீனாவின் அதிகாரத்தை எதிர்க்கும் அமைப்பு பெயர் சிடிசி (Central Tibet Administration) இதுதான் திபெத்தின் உண்மையான அரசு என்றும் திபெத்தில் சீனக் கைப்பாவையாக செயல்படும் அரசு உண்மையான அரசு கிடையாது என்றும் திபெத் மக்களில் கணிசமானோர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சிடிசி அமைப்பின் தலைவர் லோப்சாங் சங்கே, தற்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சொன்னது என்ன
லோப்சாங் சங்கே தனது பேச்சில், லடாக்கில் சீனா அத்துமீறியது எதிர்பார்த்த ஒன்றுதான். சீனாவின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. இதை சீனாவின் ‘Five Fingers of Tibet strategy' என்று கூறுவார்கள். எங்கள் திபெத்திற்கு எதிராக சீனாவின் மாசே துங் இந்த விதியைதான் பயன்படுத்தினார். அப்படித்தான் அவர்கள் திபெத்தை ஆக்கிரமித்தனர். எங்களுக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடக்க போகிறது.

திபெத் அரசியல்
திபெத் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட போது மாசே துங் ஒரு வார்த்தை கூறினார். அதில் திபெத் என்பது சீனாவின் பாதம் போன்றது.அதை கைப்பற்றிவிட்டோம். இனி பாதத்தின் ஐந்து விரல்களை கைப்பற்ற வேண்டும். ஐந்து விரல்கள் என்றால் லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய ஐந்து பகுதிகள் ஆகும். இந்த ஐந்தையும் சீனாவிற்குள் கொண்டு வருவதே அவர்களின் நோக்கம்.

இதுதான் திட்டம்
2017ல் டோக்லாம் பகுதியில் ஏற்பட்ட சண்டையும், தற்போது லடாக்கில் ஏற்படும் சண்டையும் இதனால்தான். சீனாவின் திட்டம்தான் எல்லாம். திபெத்தில் 60 வருடங்களுக்கு முன் சீனா என்ன செய்ததோ அதே விஷயத்தை இப்போதும் சீனா செய்கிறது. லடாக்கில் கை வைத்த சீனா சீக்கிரமே சிக்கிம், அருணாசலப்பிரதேசம் பக்கம் வந்துவிடும். அதில் சந்தேகம் இல்லை.

பாதம் பிடித்தனர்
சீன அரசியல்வாதிகளை நீங்கள் நம்ப முடியாது. அவர்கள் எப்போது எப்படி செயல்படுவார்கள் என்று தெரியாது. பாதம் என்னும் திபெத்தை பிடித்துவிட்ட அவர்கள், தற்போது விரல்களை நோக்கி வருகிறது. லடாக் உள்ளிட்ட ஐந்து இடங்களை நோக்கி அவர்கள் வருகிறார்கள். இந்தியா எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்தியா என்ன செய்தாவது தனது நிலப்பரப்பை காக்க வேண்டும்.
Recommended Video

பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்க முடியும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்தியா தனது நிலத்தை மீட்க முடியும். இந்தியாவிற்கு தனது நிலத்தை காக்க எல்லா உரிமையும் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்து அவர்கள் தங்கள் நிலத்தை காக்க வேண்டும் என்று லோப்சாங் சங்கே தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி இந்தியாவிற்கு பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications