தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தானை உசுப்பும் சீனா! மாஸ்டர் பிளானுக்கு ரெடியாகும் இந்தியா
டெல்லி: பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சீனா உசுப்பிவிட்டு வருவதாக பேசப்பட்டு வந்த நிலையில், ஆப்கானின் குனாரின் சர்கானி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏற்கெனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை, சச்சரவுகள் அதிகரித்துள்ளது. இப்படி இருக்கும்போது பாகிஸ்தான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல் இரு நாடுகளிடம் போரை தூண்ட வாய்ப்பு இருக்கிறது.

ஆப்கான் -பாகிஸ்தான் மோதல்:
பாகிஸ்தானில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடப்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால் சமீபத்தில் அந்நாட்டின் ரயில் நிலையம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரியதாக பேசப்பட்டது. இந்த விஷயத்தில் பாக் கொஞ்சம் கோவமும் அடைந்தது. ஏனெனில் அடுத்த 2 ஆண்டுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் பொறுப்பு வகிக்க இருக்கிறது. இந்த நேரம் பார்த்து, தீவிரவாத தாக்குதல் நடந்தால், ஐநாவுக்கு பதில் சொல்ல வேண்டி வரும். எனவே தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் இறங்கியது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனும் தீவிரவாத அமைப்பின் இருப்பிடம் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடந்த இந்த தாக்குதலில் சுமார் 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் பதிலடி:
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டது தீவிரவாதிகள் கிடையாது, அப்பாவி பொதுமக்கள்தான். எனவே இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்குள் வந்தது. அதன்படி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய 2 நாட்களுக்கு பிறகு, அந்நாட்டு ராணுவம் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில், பாக். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், சிலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால், போர் உருவாகும் சூழல் அமைந்துவிட்டது.
சீனாவின் சித்து விளையாட்டு:
இதற்கு பின்னால் சீனா இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகின்றன. அதாவது, பாகிஸ்தான் ராணுவத்திடம் போதுமான பலம் கிடையாது. ஆனால் ஆப்கானிஸ்தான் அப்படியில்லை. பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்த தாலிபான்கள்தான் அமெரிக்க ராணுவத்தையே எதிர்த்து கடந்த காலங்களில் போரிட்டிருந்தனர். அந்த வகையில், தாலிபான்களை எதிர்கொள்ளும் அளவுக்கான தைரியத்தையும், ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு சீனா ரகசியமாக சப்ளை செய்வதாக உறுதி அளித்திருக்கலாம். அதனால்தான் பாகிஸ்தான் இவ்வளவு மூர்க்கமாக நடந்துக்கொள்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மாஸ்டர் பிளானுக்கு ரெடியாகும் இந்தியா:
இதையெல்லாம் கவனித்த இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் தனது உறவை பலப்படுத்த தொடங்கியுள்ளது. பாகிஸ்தானை பலவீனமாக்க இந்த வழி எளிதானது. இந்தியா நேரடியாக போருக்கு போக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர முடியும். இதன் அடிப்படையில்தான் சமீபத்தில் சவுதியில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்தித்திருக்கின்றனர்.
நேற்றுவரை தாலிபான்களை தீவிரவாதிகளாக பார்த்த இந்தியா, பாகிஸ்தானை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றதும், இன்று அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டது. மட்டுமல்லாது சீனாவிடமிருந்தும், துருக்கியிடமிருந்தும் அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டு வருகிறது. அப்படி நடந்தால் இந்தியாவுக்கு சிக்கலாகிவிடும். எனவே, பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்தியாவும்-தாலிபான்களும் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற டோனில் ஒன்றினைய முயன்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications