இலங்கையில் சீனா உளவு கப்பல்... இந்திய பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்: ராஜ்யசபாவில் வைகோ
டெல்லி: இலங்கையில் சீனா உளவு கப்பல் அனுமதிக்கப்படுவதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபாவில் எச்சரித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் உளவு கப்பலானது ஆராய்ச்சி என்ற பெயரில் வரும் ஆக.11-ந் தேதி இலங்கைக்கு வருகை தர உள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்த்ல் ஒரு வார காலம் இந்த உளவு கப்பல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இலங்கைக்கு சீனா உளவு கப்பல் வருகை தருகிறது என ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அந்நாட்டு அரசு முதலில் மறுத்தது. இதனால் சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து இலங்கை அரசானது, சீனாவின் ஆராய்ச்சி கப்பல்தான் இலங்கைக்கு வருகிறது; அனுமதி அளித்துள்ளோம் என கூறியது.
இலங்கைக்குள் சீனாவின் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. தொடக்கம் முதலே இலங்கை அரசின் நிலைபாட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இலங்கைக்குள் சீனா கப்பலை அனுமதிக்க கூடாது என ஈழத் தமிழ் தலைவர்கள், மலையக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் அவர்களது எச்சரிக்கை.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த விவகாரத்தை எழுப்பினார். ராஜ்யசபாவில் பேசிய வைகோ, இலங்கையின் அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலுக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவின் உளவு கப்பல் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை எளிதாக உளவு பார்க்க இது வகை செய்யும் என சுட்டிக்காட்டினார்.
முன்னதாக ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து இந்த அமளி நீடித்ததால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.