இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்களை நோட்டம் விடும் சீன உளவு கப்பல்! சைலன்ட்டாக உதவும் மாலத்தீவு?
டெல்லி: இலங்கையை தொடர்ந்து, மாலத்தீவும் சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதியளித்திருக்கிறது. இந்த கப்பல்கள் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்களின் இயக்கங்களை கண்காணிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சீன உளவுக் கப்பலான 'ஜியாங் யாங் ஹாங் 01' இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல மற்றொரு கப்பலான 'ஜியாங் யாங் ஹாங் 03' மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு உளவு கப்பல்கள் இந்திய கடல் பரப்பில் இருப்பது இந்தியாவுக்கான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

தங்களது நீர்மூழ்கி கப்பல்கள் செயல்படுவதற்கான சில ஆய்வுகளை இந்த கப்பல்கள் மேற்கொள்வதாகவும், இது ஆய்வு கப்பல்தான் என்றும் சீனா கூறி வருகிறது. ஆனால், கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் இதனை உளவு கப்பல் என்றே அழைக்கின்றனர். ஏனெனில் இந்த கப்பலில் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கும் அதிநவீன கருவில் இடம்பெற்றிருக்கின்றன.
சாதாரண வெளிப்பரப்பில் மேற்கொள்ளப்படும் சோதனைகள், செயற்கைக்கோள் உதவியுடன் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால், நீருக்கடியில் நடக்கும் சோதனைகளை தெரிந்துக்கொள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களில் மூன்று கப்பல்கள் அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைகளை கொண்டிருக்கிறது. இந்த ஏவுகணைகளை கொண்டு சில சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
எனவே இதனை கண்காணிப்பது சீன உளவு கப்பலுக்கு முதன்மையான பணியாக இருக்கலாம். சீன கப்பல்கள் தற்போது 'ஹைட்ரோகிராஃபி' ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதைதான் 'ஹைட்ரோகிராஃபி' சர்வே என்று சொல்வார்கள். இந்த ஆய்வை சொல்லி, இந்திய நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாடுகளை சீன கப்பல் உளவு பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள ஐடிஆர் ஏவுகணைகளின் சோதனைகளையும் சீன உளவு கப்பலால் கண்காணிக்க முடியும். இலங்கையை விட மாலத்தீவு, இந்தியாவிலிருந்து தூரமாகத்தான் இருக்கிறது. அதேபோல, சீனாவின் உளவு கப்பல் சர்வதேச கடல் பரப்பில்தான் இருக்கிறது. இருப்பினும் அங்கிருந்தே மேற்குறிப்பிட்ட அனைத்து உளவு வேலைகளையும் இந்த கப்பல்களால் செய்துவிட முடியும் என்றும் கூறியுள்ளனர்.
சமீப காலமாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை. இந்த நேரத்தில் மாலத்தீவில் சீன உளவு கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருப்பது, சந்தேகத்தை மேலும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications