தேர்தல் நெருங்கும் நிலையில்.. மத்திய அரசு அதிரடி.. நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்
டெல்லி: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன.
நாடு முழுவதும் போராட்டங்கள்: குறிப்பாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள மதங்களில் இஸ்லாம் இடம்பெறாததை சுட்டிக்காட்டி ஒரு மதத்தினருக்கு எதிராக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இலங்கையும் இதில் இடம்பெறாத காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கும் இதனால் பயனில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை ஷாகின் பாக் போராட்டங்கள் பல நாட்களாக நடைபெற்றன. இதனை தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டாலும் இன்று வரை இதற்கான எதிர்ப்பு என்பது மக்கள் மத்தியில் தொடர்கிறது. ஆனால் மத்திய அரசோ இதற்கான விதிகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது.
அமலுக்கு வருவதாக அறிவிப்பு: இதனால் தற்போது வரை இந்த சட்டம் அமலுக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில், 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள சூழலில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சூழ்நிலை காரணமாக அறிவிக்காத மத்திய அரசு இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எனினும், லோக்சபா தேர்தலுக்குள் சிஏஏ விதிகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி பல மூத்த பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications