கிரிமிலேயர் கோட்பாட்டை பட்டியல் சாதியினருக்கும் நீட்டிக்க வேண்டும்! - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
டெல்லி: "இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் குழந்தைகளை, ஒரு ஏழை விவசாய தொழிலாளியின் குழந்தைகளுடன் சமமாக கருத முடியாது. 'கிரிமிலேயர்' கோட்பாட்டை பட்டியல் சாதியினருக்கும் நீட்டிக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியிருக்கிறார்.
சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு இருந்தாலும், பொருளாதாரத்தில் முன்னேறியவர்களும் இடஒதுக்கீடை அனுபவித்து வருகிறார்கள் என்று பிரச்சனை எழுந்தது. அப்போதுதான் கிரிமிலேயர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது ஓபிசி பிரிவில், பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் பொருந்தாது.

சரி பொருளாதார ரீதியில் முன்னேறியவர்கள் யார்? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கான வரையரைகள் என்ன என்பது குறித்து சர்ச்சைகள் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் இந்த கிரிமிலேயர் முறையை பட்டியல் சாதியினருக்கும் நீடிக்க வேண்டும் என்று கவாய் பேசியிருக்கிறார். 'இந்தியா மற்றும் 75 ஆண்டுகால இந்திய அரசியலமைப்பு' என்கிற தலைப்பின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கவாய், மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார்.
கடந்த 2024ம் ஆண்டு கிரிமிலேயர் கோட்பாடு பட்டியல் சாதியினருக்கும் பொருந்தும் என்று இவர் தீர்ப்பளித்திருந்தார். அதில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் உள்ள 'கிரிமிலேயர்' பிரிவினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு பலன்களை மறுப்பதற்கான கொள்கைகளை மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக கவாய் தற்போது கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "பல ஆண்டுகளாக நாட்டில் சமத்துவம் மற்றும் மகளிர் மேம்பாடு வேகம் பெற்றுள்ளது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாகுபாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. தலைமை நீதிபதியாக நான் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி ஆந்திராவின் அமராவதியில் நடைபெறுகிறது. முதல் நிகழ்ச்சி மகாராஷ்டிராவில் எனது சொந்த ஊரான அம்ராவதியில் நடந்தது. இந்திய அரசியலமைப்பு ஒரு நிலையான ஆவணம் அல்ல, அது வளர்ச்சி அடைந்து வரும் ஒரு உயிருள்ள ஆவணம் என்றே டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எப்போதும் கருதினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 368-வது பிரிவு, அரசியலமைப்புத் திருத்தத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது. டாக்டர் அம்பேத்கரை ஒருபுறம் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரங்கள் மிக தாராளமானவை என்று விமர்சித்தனர். மறுபுறம், சில திருத்தங்களுக்கு பாதி மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதால், திருத்தங்கள் சாத்தியமற்றவை என்றும் விமர்சிக்கப்பட்டது.
அரசியலமைப்பு வரைவுத் திட்டம் தொடர்பான டாக்டர் அம்பேத்கரின் உரைகள், சட்ட மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை. சுதந்திரம் இல்லாத சமத்துவம், மனிதனின் திறமைகளை வெளிக்கொணர ஊக்கமளிக்காது, சுதந்திரம் மட்டும் இருந்தால் பலமானவர்கள் பலவீனமானவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்" என்று பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications