இலவசங்கள் தொடர்பாக வல்லுநர் குழு அமைக்க மத்திய அரசு யோசனை! 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம்!!
டெல்லி: இலவசங்கள் வழங்குவது தொடர்பாக ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பெஞ்ச் முன்பாக நடைபெற்று வரும் இலவசங்கள் தொடர்பான வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இலவசங்கள் தொடர்பாக வாக்குறுதிகள் அளிக்கும் கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி ஏற்கனவே இணைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக தரப்பும் இடையூட்டு மனுவைத் தாக்கல் செய்து வாதிட்டு வருகிறது.
இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இலவசங்களை வழங்குதல் என்பது மிக முக்கியமான ஒன்று. இது தொடர்பாக விவாதங்களும் தேவை. இலவசங்களை மாநில அரசுகள் வழங்கக் கூடாது என மத்திய அரசு தடை விதிக்கிறது எனில் அதை ஆய்வு செய்ய முடியாது என நீதித்துறை சொல்ல முடியாது. மக்கள் நலத் திட்டங்கள், இலவசங்கள் இரண்டுக்குமான வேறுபாட்டை அடையாளம் காண வேண்டும். வாக்குறுதிகள் என்பது இலவசத்தில் வருமா? மக்கள் நலத் திட்டத்தின் கீழ் வருமா? என்பது வரையறுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் தேர்தல் நேரத்தில் எதற்காக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன? பணம் எங்கிருந்து வருகிறது? தேர்தல் காலங்களில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் ஏன் ஒழுங்குபடுத்தக் கூடாது? தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடுகிறதுதானே? அப்படியான நிலையில் இலவச வாக்குறுதிகளை ஏன் தேர்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாமல் போகும்?
மாநில அரசின் இலவச திட்டங்களால் கிராமப்புற மக்களுக்கு பலன் கிடைக்கிறது. ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன; சில மாநிலங்கள் சைக்கிள்களை வழங்குகின்றன; கால்நடைகள் வழங்குகின்றன. மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை மாணவர்கள், ஏழை மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த உவுகின்றன.இவை நலத் திட்டங்கள். இலவசங்களை வழங்குதல் என்பது ஒரு சிக்கலான விவகாரம் என்றார்.

இன்றும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், இலவசங்கள் தொடர்பாக ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம், ஏற்கனவே இது தொடர்பாக ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கலாம் என கூறியிருந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பணி ஓய்வு பெறுவதால் இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இலவசங்கள் தொடர்பாக ஏற்கனவே சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை ஆய்வு செய்யவும் தலைமை நீதிபதி ஒப்புக் கொண்டார்.
சுப்பிரமணியம் பாலாஜி வழக்கில் இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்கள் என்பது சட்டம், கொள்கை சார்ந்தது; இவை அடித்தட்டு மக்களின் நலனை இலக்காக கொண்டவை. அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையே செயல்படுத்துகின்றன. இது விதிமீறல் அல்லது ஊழல் அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications