சல்மான் கான், கல்யாண் சிங், அமித் ஷா.. விஐபிகள் வழக்கில் வக்கீலாக ஆஜாராகிய திறமையாளர் யுயு லலித்!
டெல்லி: பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்யாண் சிங், வன உயிரினங்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கான், ஷெராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தற்போதைய மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் வழக்கறிஞராக ஆஜராகியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யுயு லலித் பதவியேற்றிக் கொண்டுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், யுயு லலித் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள யுயு லலித் பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6வது நபர் யுயு லலித்.
பாபர் மசூதி முதல் பேரறிவாளன் விடுதலை வரை! அரசியலமைப்பு பிரிவு 142ல் சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்
யுயு லலித் தந்தை
1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்தவர் யுயு லலித். இவரது தந்தை யு.ஆர். லலித், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தவர்.
சட்ட கல்லூரியில் படிப்பை முடித்த இவர், 1983 முதல் 1985 வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து, 1986 முதல் 1992 வரை அப்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் வழக்குறிஞர் குழுவில் பணியாற்றினார்.
கல்யாண் சிங்
அதுமட்டுமல்லாமல் வழக்கறிஞராக தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்ட வழக்குகளில் யுயு லலித் ஆஜராகி வாதிட்டுள்ளார். இவர் 1994ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான கல்யாண் சிங்கிறாக ஆஜரானார்.
சல்மான் கான் வழக்கு
அதேபோல் 1998ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கில் ஆஜாராகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஷொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்காகவும் ஆஜராகியுள்ளார்.
2ஜி வழக்கு
அதேபோல் 2011ல் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக யு.யு. லலித் நியமிக்கப்பட்டார். அவர் இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.