டெல்லியை நடுநடுங்க வைத்த 12ஆம் வகுப்பு மாணவன்.. 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஷாக் காரணம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிகளில் தேர்வு நடைபெறுவதை தடுப்பதற்காக அந்த மாணவன் இப்படி செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மற்ற பள்ளிகளுக்கும் சேர்த்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார் அந்த மாணவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் புரளி எனக் கண்டறிந்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி வந்த போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவனை கண்டறிந்தனர். தேர்வுகளை நிறுத்துவதற்காக அந்த மாணவர் இவ்வாறு செய்து வந்துள்ளார்.

அண்மைக் காலமாக, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது கட்டிடங்கள், பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வெடிகுண்டு மிரட்டலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகளில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, போலீசாரும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு கடந்த 23 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தது 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர்தான் என்பதை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஒவ்வொரு முறையும் தனது பள்ளியுடன் சேர்த்து மற்ற பள்ளிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு அந்த பள்ளிகளின் கேம்பஸில் ஆபத்தான வெடிபொருட்கள் இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் அந்த மாணவர்.
இதுபோல 6 முறை 23 பள்ளிகளுக்கு அந்த மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக டெல்லி தெற்கு காவல்துறை டிசிபி அங்கித் சவுகான் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையும் சில பள்ளிகளுக்கு மாணவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவனை வலைவீசியதில், சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மாணவனை தற்போது காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், பள்ளியில் நடக்கும் தேர்வுகளை தடுக்க வேண்டும், வேறொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பதற்காக வெடிகுண்டு மிரட்டல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியது தெரியவந்துள்ளது. அந்த மாணவனுடன் வேறு யாரும் கூட்டு சேர்ந்து செய்தார்களா என விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications