என்னது கேரளா மினி பாகிஸ்தானா? மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவுக்கு பினராயி விஜயன் கண்டனம்
டெல்லி: கேரளா மாநிலத்தை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே விமர்சித்ததற்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சாசனத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதி மொழியை மீறி இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் நிதேஷ் ரானேவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது: மகாராஷ்டிராவின் பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே, கேரளாவை மினி பாகிஸ்தான் என விமர்சித்திருப்பது கடுமையான ஆத்திரமூட்டும் விமர்சனமாகும். கேரளா மாநிலம் குறித்த சங் பரிவார அமைப்புகளின் அடிப்படை பார்வையே இதுதான். கேரளாவில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து வாக்குகளைப் பெற முடியும் என கனவு காண்கின்றனர் சங் பரிவாரங்கள். இதற்கு நேரடியான உதாரணமே நிதேஷ் ரானேவின் பேச்சுதான்.

அரசியல் சாசனத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டு அமைச்சரான நிதேஷ் ரானே, அதனை மீறி விமர்சித்திருக்கிறார். இத்தகைய நபர்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையும் தகுதியும் இல்லை; ஆகையால் நிதேஷ் ரானேவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
மகாராஷ்டிரா பாஜக அமைச்சர் நிதேஷ் ரானேவின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ராகுல்- பிரியங்காவின் வெற்றியை சிபிஎம் கட்சி விமர்சித்ததற்கும் பாஜகவின் நிதேஷ் ரானேவின் விமர்சனத்துக்கும் என்ன தொடர்பு எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளா மினி பாகிஸ்தான்- நிதேஷ் ரானே கூறியது என்ன?
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய நிதிஷே ரானே, கேரளாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்துவிட்டது. கேரளாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்களா- முஸ்லிம்களாக மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். கேரளாவில் மதம் மாற்றுகிற லவ் ஜிஹாத் சம்பவங்கள் நிகழ்கின்றன. கேரளா மாநிலமே ஒரு மினி பாகிஸ்தானாக மாறிவிட்டது. கேரளாவில் போட்டியிட்ட ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் ஆதரித்து ஓட்டுப் போட்னர்; அதேபோல பிரியங்கா காந்திக்கும் பயங்கரவாதிகளே ஓட்டுப் போட்டுள்ளனர் என பேசியிருந்தார். இதுதான் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications