நாட்டையே உலுக்கிய கோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு.. மனோகரனுக்கு தூக்கு உறுதி! உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video
டெல்லி: கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து, அவரது சகோதரனையும் கொன்ற, குற்றவாளி மனோகரனுக்கு, தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
2010ம் ஆண்டு கோவையை மட்டுமல்ல, மொத்த நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு சம்பவம் கோவையில் நடந்தது. கோவை நகரை சேர்ந்த, தனியார் பள்ளியில் படித்து வந்த 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் அவரது தம்பி 8 வயது சிறுவன் ரித்திக் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்கள் உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு எதிராக மொத்த கோவையும் கொந்தளித்தது.

என்கவுண்டர்
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், வாடகை கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றார். எனவே போலீசார் அவரைச் சுட்டுக் கொன்றனர். இதையறிந்த கோவை மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

மகளிர் நீதிமன்றம்
இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மனோகரனுக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம், இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்துக் கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு வழங்கியது. சென்னை ஹைகோர்ட்டில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். அங்கேயும், மகளிர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

மூன்று நீதிபதிகள் அமர்வு
இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனோகரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஃபாலி நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

மரண தண்டனை
தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா தீவிரமாக வாதங்களை முன்வைத்தார், மனோகரன் தரப்பில் வழக்கறிஞர் பி.வினாய் குமார் ஆஜராகியிருந்தனர். விசாரணை முடிவில், மரண தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

சீராய்வு மனு தள்ளுபடி
இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார் மனோகரன். இதை இன்று டிஸ்மிஸ் செய்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. குற்றவாளிக்கு இருக்க கூடிய அடுத்த வாய்ப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதுதான். ஆனால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், 99.9 சதவீதம் அது தள்ளுபடி செய்யப்படும் என்பதே உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழக்கு வரலாறு என்பதால் மனோகரனை தூக்கிலிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications