"இலங்கையை" "தமிழ்நாட்டுடன்" இணைக்கவே தரைப்பாலம் அமைக்கிறது இந்தியா.., கொழும்பு பேராயர் பகீர்
டெல்லி: இலங்கையை இந்தியாவின் தமிழ்நாட்டுடன் இணைக்கவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைப்பாலம் அமைக்கப்படுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் மோடியுடனான ஆலோசனையின் போது இருநாடுகளிடையே தரைப்பாலம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் முடிவடைந்துவிட்டன; இதற்கு அடுத்ததாக முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் தெரிவித்திருந்தார். ஈழத் தமிழர் பகுதியான மன்னாரில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவை கடந்த வாரம் சந்தித்த போது ரணில் விக்கிரமசிங்கே இத்தகவலை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேகாலை - ருவன்வெல்லவில் செய்தியாளர்களிடம் பேசிய கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கூறியதாவது: தென்னிந்தியாவிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வந்து நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பதற்கு எங்கள் வரலாறு முழுவதும் ஆதாரங்கள் உள்ளன.
ஒவ்வொரு முறையும் சிங்கள மன்னர்கள் படைதிரட்டி போர்புரிந்து தென்னிந்திய மன்னர்களிடமிருந்து நிலங்களை விடுவிக்கவேண்டிய நிலை காணப்பட்டது.
தற்போது இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் தரைப்பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்கின்றது இதன்காரணமாக இலங்கை தமிழ்நாட்டின்.
வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவுகள் நன்மையானவையா தீமையானவையா என ஆராயாமல் அவை அனைத்தையும் நிறைவேற்றும் உறுதிப்பாட்டுடன் அரசாங்கம் உள்ளது.
எங்களுக்கு நன்மையளிக்காத விடயத்தை நாங்கள் செய்யக்கூடாது.இது குறித்து அவதானமாகயிருக்க வேண்டும், இல்லாவிட்டால் தற்போது காணப்படும் நிலைமையை விட இன்னமும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம் எங்கள் இறைமை சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதனையும் செய்ய கூடாது. இவ்வாறு கர்தினால் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications