மத்திய பல்கலைக்கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை.. +2 மார்க் கணக்கில்லை
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 45 பல்கலைக்கழகங்கள் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவி உடன் நடந்து வருகிறது. இந்தப் பல்கலைகழங்களின் மாணவர் சேர்க்கையை யுஜிசி கவனித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
வரும் 2022-2023 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவி பெறும் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலைப் படிப்புகளில் சேர பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. CUET UG எனப்படும் இந்த பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 2022 முதல் வாரத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

+2 மதிப்பெண் கணக்கில்லை
மேலும், முதுகலை படிப்புகளான நுழைவுத் தேர்வான CUET - 2022 (PG)இல் பங்கேற்பதாகப் பல பல்கலைக்கழகங்கள் உறுதி செய்துள்ளதாகவும் யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் முக்கியமானது என்னவென்றால், மாணவர் சேர்க்கை என்பது முழுக்க முழுக்க நுழைவுத் தேர்வை அடிப்படையாக வைத்து மட்டுமே நடத்தப்படும் என்றும் மாணவர் சேர்க்கையில் 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் எந்தவொரு தாக்கத்தையும் கொண்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

13 மொழிகள்
இந்தத் தேர்வு பிரிவு 1A, பிரிவு 1B, பொதுத் தேர்வு மற்றும் டொமைன் சார்ந்த பாடங்களைக் கொண்டிருக்கும். பிரிவு 1A, கட்டாய தேர்வாக இருக்கும்: மேலும் 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படும். இந்தப் பொது நுழைவுத் தேர்வு என்பது பலதரப்பட்ட மாணவர்களுக்கு, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவது உறுதி செய்யும் என்று யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். அதேபோல அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே தேர்வு என்பதால் செலவுகளை இது குறைக்கும் என்றே சிலர் கூறுகின்றனர்

சம வாய்ப்பு
மத்திய பல்கலைக்கழகங்களைத் தவிர, தனியார் பல்கலைக்கழகங்களும் கூட விருப்பப்பட்டால் இளங்கலை மற்றும் முதுகலை சேர்க்கைக்கு இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம் என்றும் யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். ஏற்கனவே, டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்கள் சியூஇடி அடிப்படையில் மட்டுமே இளங்கலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications