சீக்கிரமாக பயணிகளுக்கு இழப்பீடு கொடுங்க.. மத்திய அரசு - இண்டிகோவை சாடிய டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் மிகவும் கவலையளிப்பதாக கூறிய நீதிமன்றம் விமானம் ரத்தானதால் விமான நிலையத்தில் தவித்த பயணிகளுக்கு சீக்கிரமாக இழப்பீடு வழங்க இன்டிகோவுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.

நம் நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையேயும், வெளிநாடுகளுக்கும் இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. நம் நாட்டின் உள்நாட்டு சேவையில் இண்டிகோ விமானம் 65 சதவீதம் வரை விமானங்களை இயக்கி வருகிறது. இதனால் உள்நாட்டு சேவையில் இண்டிகோ விமானம் தவிர்க்க முடியாத வகையில் உள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி நேற்று முன்தினம் வரை ஒரு வாரமாக இண்டிகோ விமான சேவைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் பல நூறு விமானங்கள் ரத்தாகின. அதன்பிறகு 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்தாகின. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் தவித்தனர்.
நேற்று முதல் இண்டிகோ விமான சேவை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நேற்றைய தினம் இண்டிகோ சார்பில் 1,800 விமானங்கள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர். இதற்கிடையே இண்டிகோ விமானங்கள் திடீரென்று ரத்தானது மற்றும் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டிகே உபாத்யாயா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், இண்டிகோ நிறுவனம் மற்றும் மத்திய அரசை கடுமையாக கண்டித்தது. இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம், ‛‛இண்டிகோ விமானங்கள் அடுத்தடுத்து ரத்தானது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திடீரென ஒரு நெருக்கடி ஏற்படும்போது பிற விமான நிறுவனங்கள் எப்படி விமான டிக்கெட் கட்டணத்தை ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை டிக்கெட் கட்டணம் வசூலித்து லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டன?. இத்தகைய நிலைமை மோசமானது. இந்த சூழல் வர நீங்களே அனுமதித்துவிட்டீர்கள்'' என உச்சநீதிமன்றம் இண்டிகோ நிறுவனம் மற்றும் மத்திய அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தது.
இந்த வேளையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் ஷர்மா, ‛‛இண்டிகோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றார். ஆனால் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதோடு நீதிமன்றம், ‛‛இந்த நடவடிக்கைகள் பிரச்சனை வந்த பிறகு தான் எடுக்கப்பட்டன. முதலில் இந்த பிரச்சனை ஏன் ஏற்பட்டது? அதுவரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்டு கடிந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, ‛‛விமான நிலையங்களில் சிக்கித் தவித்த பயணிகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்) மற்றும் இன்டிகோ விரைவாக இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications