பிரதமர் மோடி, அஜித் தோவல் உள்ளிட்ட விவிஐபிகள் ரகசிய தகவல்கள் திருட்டு.. டெல்லி போலீஸ் ஷாக்
டெல்லி: பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு இருந்த டெல்லி போலீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போலீஸ் கூறுகையில், ''நடப்பு செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முக்கிய விவிஐபிக்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. பாதுகாப்பு மீறப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்குகிறது.. வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் புதிய பாலம்...பீகாரில் திறந்து வைத்த மோடி
ரகசியங்கள்
டெல்லியில் தேசிய தகவல் மையத்தில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த தகவல்களை திருடியுள்ளனர். இந்த மையம்தான் மத்திய அரசின் தகவல் மற்றும் கம்யூனிகேஷன் தொழில்நுட்பங்களை பாதுகாத்து வருகிறது.
அமெரிக்க நிறுவனம்
இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் விசராணை மேற்கொண்டோம். தகவல்களை திருடிய மெயில் பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. பெங்களூருவில் இருக்கும் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து தேசிய தகவல் மையத்திற்கு இ மெயில் வந்துள்ளது. அந்த இ மெயிலை திறக்கும்போது, தேசிய தகவல் மையத்தின் தகவல்கள் அனைத்தும் அந்த இ மெயிலுக்கு சென்றுள்ளது. இ மெயில் ஐபி முகவரி பெங்களூருவில் இருந்துதான் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.
சென்ஹூவா
சீனாவில் இருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா இந்திய ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், துணை ஜனாதிபதி, நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் தகவல்களை திருடி இருப்பதாக செய்தி வெளியானது.
கமிட்டி
இதையடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு கமிட்டி அமைத்து இருப்பதாகவும், அந்தக் கமிட்டி 30 நாட்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று நேற்று லோக் சபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து இருந்தார்.
சீனா மறுப்பு
இந்த விஷயம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மூலமாக சீன வெளியுறவுத்துறைக்கு எடுத்துச் சென்று இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து, அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல, தனியார் நிறுவனம் என்று கூறி இருந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.
டேட்டா மையம்
மேலும் வெளிநாட்டு முக்கிய தகவல் டேட்டா மையம் உலக அளவில் இருக்கும் 2.4 மில்லியன் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திரட்டி வைத்து இருப்பதாகவும், இதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது.
டெல்லி போலீஸ்
இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகையில் இந்திய முக்கிய தலைவர்களின் தகவல்களை சீன நிறுவனம் திருடி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் டெல்லியில் இருக்கும் மையத்தின் தகவல்களும் திருடப்பட்டு இருப்பதை டெல்லி போலீஸ் உறுதி செய்துள்ளது.